ஜேர்மனிக்கு மீண்டும் எரிவாயு வழங்கலை துவங்கியது ரஷ்யா: ஆனால்...
ரஷ்ய எரிவாயு நிறுவனம் ஜேர்மனிக்கு வழங்கும் எரிவாயு விநியோகம் மீண்டும் துவங்கியுள்ளது.
ரஷ்ய எரிவாயு நிறுவனமான Gazprom நிறுவனம், 10 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜேர்மனிக்கு தனது Nord Stream 1 திட்டம் மூலமாக எரிவாயு விநியோகிக்கத் துவங்கியுள்ளது.
ஜூலை மாதம் 11ஆம் திகதி, திடீரென குழாய் வழியாக ஜேர்மனிக்கு அனுப்பப்படும் எரிவாய் விநியோகத்தை ரஷ்ய எரிவாயு நிறுவனமான Gazprom நிறுவனம் நிறுத்தியது. வருடாந்திர பராபரிப்பு பணி நடைபெற இருப்பதால் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தாலும், உக்ரைன் ரஷ்யப் போர் காரணமாக ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளுக்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காக ரஷ்யா எரிவாயு விநியோகத்தை நிறுத்திவிட்டிருக்கலாம் என்ற அச்சம் உருவானது.
அத்துடன், ரஷ்யா மீண்டும் எரிவாயு வழங்குமா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று காலை முதல், மீண்டும் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் துவங்கியுள்ளதாக Nord Stream அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால், வெறும் 30 சதவிகித எரிவாயு மட்டுமே குழாய் மூலம் ஜேர்மனிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரண்டு முறை எரிவாயுவின் அளவு குறைக்கப்பட்ட நிலையில், தற்போது வெறும் 30 சதவிகிதம் மட்டுமே எரிவாயு அனுப்பப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, Gazprom நிறுவனம் குறைவான அளவிலேயே எரிவாயு அனுப்பக்கூடும் என்ற அச்சம் நீடிக்கிறது.