உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றிபெறாது: ஆனாலும்... ஜேர்மன் சேன்ஸலர் கூறும் முக்கிய தகவல்
உக்ரைன் போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெற்றிபெறமாட்டார் என்று கூறியுள்ள ஜேர்மன் சேன்ஸலர், ஆனாலும், நேட்டோ இராணுவக் கூட்டமைப்பு நேரடியாக போரில் பங்கேற்காது என்று கூறியுள்ளார்.
உக்ரைன் மீது போர் தொடுத்த விடயத்தில், புடின் அதன் நட்பு நாடுகளின் வலிமையை குறைவாக எடை போட்டுவிட்டார் என்று கூறியுள்ள ஜேர்மன் சேன்ஸலரான Olaf Scholz, எங்கள் நோக்கம் மிகத் தெளிவாக உள்ளது, அது இந்தப் போரில் ரஷ்யா வெற்றிபெறக்கூடாது என்பதுதான். அவர் வெற்றியும் பெறமாட்டார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார்.
முழு உக்ரைனையும் கைப்பற்றவேண்டும் என்னும் ரஷ்யாவின் திட்டம் இன்றைய சூழலைப் பார்க்கும்போது அது ஆரம்பத்திலிருந்ததைவிட தூரமாகப்போய்விட்டது என்று கூறும் Olaf Scholz, உக்ரைன் ரஷ்யாவை சரியாக சமாளித்துவருகிறது என்றார்.
உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதற்புப் பின்பும் பலமுறை புடினுடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ள Olaf Scholz, உக்ரைனுடைய எதிர்ப்பை சமாளிக்க முடியாது என்பதை உணரும்வரை புடின் சீரியஸாக பேச்சுவார்த்தைக்கு வரமாட்டார் என்கிறார்.
மேற்கத்திய நட்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி வருவதுடன் ரஷ்யா மீது கடுமையான தடைகளையும் விதித்து வரும் நிலையில், அவை தொடர்ந்து உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை அளிக்கும் என்றார் அவர்.
இருந்தாலும், போரில் நேரடியாக நேட்டோ அமைப்பு பங்கேற்காது என்பதை மறுபடியும் வலியுறுத்திய Olaf Scholz, ஏனென்றால், அது அணு ஆயுத நாடுகளுக்கிடையிலான நேரடியான மோதலாக மாறிவிடும் என்கிறார்.