கனடாவிலிருந்து சொந்த நாடு திரும்பிய இளைஞர்: மன வருத்தத்தை ஏற்படுத்திய விடயம்
பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி நடித்த திரைப்படம் ஒன்றில், குடும்பத்தை நல்ல நிலைமைக்குக் கொண்டு வருவதற்காக அரபு நாடொன்றிற்குச் செல்வார் கதாநாயகன்.
இள வயது மனைவியையும் குடும்பத்தையும் பிரிந்து வெளிநாட்டில் தனிமையில் வாடும் கதாநாயகன், எப்போதும் தன் நாட்டிலிருக்கும் குடும்பத்தைக் குறித்தே எண்ணிக்கொண்டிருப்பார்.
இளைமையை தொலைத்து, கஷ்டப்பட்டு உழைத்து குடும்பத்தை ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்துவிட்டு, கடைசியாக 50 வயதில் நாடு திரும்புவார் அவர்.
ஆனால், விடுமுறைக்கு வரும்போதெல்லாம் அவருக்கு கிடைக்கும் வரவேற்பு இனி இருக்காது என்பதும், தன் குடும்பத்துக்கு, தன் பணம்தான் முக்கியம், தான் அல்ல என்பதை புரிந்துகொண்ட அவர், மன வேதனையுடனும், ஏமாற்றத்துடனும் மீண்டும் தான் வேலை செய்துவந்த அரபு நாட்டுக்கே திரும்பிவிடுவார்.
அதேபோன்றதொரு விடயம் இந்தியர் ஒருவருக்கு உண்மையாகவே நிகழ்ந்துள்ளது.
கனடாவிலிருந்து இந்தியா திரும்பிய இளைஞர்
ஐந்து ஆண்டுகளுக்கு முன், கனடாவுக்கு கல்வி கற்பதற்காக சென்றுள்ளார் இந்திய இளைஞர் ஒருவர்.

படித்து முடித்தபின், துரதிர்ஷ்டவசமாக அவருக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கிடைக்கவில்லை. ஏற்கனவே சொந்த நாட்டையும் குடும்பத்தையும் மிஸ் பண்ணிய அவர், இந்தியாவுக்கே திரும்பிவிடலாம் என முடிவு செய்துள்ளார்.
ஆனால், தான் கனடாவிலிருக்கும் வரை தான் தன் குடும்பத்தால் நடத்தப்பட்ட விதத்துக்கும், இப்போது இந்தியா வந்தபின் தான் நடத்தப்படும் விதத்துக்கும் பயங்கர வித்தியாசம் இருப்பதாகக் கூறுகிறார் அவர்.
நான் கனடாவில் படிக்கும்போது கல்விக்கடன் வாங்கித்தான் படித்தேன். என் கடனையும் நானே அடைத்துக்கொண்டு, வீட்டுக்கும் பணம் அனுப்பினேன்.
இப்போதும் என் செலவுகளை நான்தான் கவனித்துக்கொள்கிறேன் என்று கூறும் அவர், ஆனால், என் தாய் என்னை நடத்தும் விதம் கூட மாறிவிட்டது என்கிறார்.
நீ போதுமான அளவில் முயற்சி செய்யவில்லை, அதனால்தான் உனக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கிடைக்கவில்லை, நீ கனடா சென்றதே வீண், நீ கனடாவுக்குப் போயிருக்கவே கூடாது, தண்ட செலவு என்றெல்லாம் என் தாயே திட்டுகிறார்.
கடந்த ஒரு மாதமாக கடும் மன உலைச்சலுக்கு ஆளாகியுள்ளேன், என்ன செய்வதென்று தெரியவில்லை என்று கூறி, சமூக ஊடகம் ஒன்றில் தன் அனுபவத்தைப் பகிர்ந்து ஆலோசனை கோரியுள்ளார் அந்த இளைஞர்.
அவரது இடுகையைப் படித்த பலரும், அவருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |