பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்படுமா? சுகாதாரச் செயலர் பதில்
ஐரோப்பிய நாடுகள் சில கொரோனா பரவலைத் தவிர்ப்பதற்காக தடுப்பூசி பெறாதவர்களுக்கு மட்டும் பொது முடக்கம், கட்டாய தடுப்பூசி திட்டம் என பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
பிரித்தானியாவிலும் அதே நிலை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், அதற்கு பிரித்தானிய சுகாதாரச் செயலரான சாஜித் ஜாவித் பதிலளித்துள்ளார்.
ஆஸ்திரியா நாடு, கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பொதுமுடக்கம் அறிவித்துள்ளதுடன், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் என அறிவித்துள்ளது. ஜேர்மனியும் அதே முடிவை எடுக்க இருப்பதாக தெரிகிறது.
கட்டாய தடுப்பூசி முதல் கட்டுப்பாடுகள் வரை சில ஐரோப்பிய நாடுகளில் எதிர்ப்புகளை உருவாக்கியுள்ள நிலையில், சில இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
நெதர்லாந்து பகுதி பொதுமுடக்கம் அறிவிக்க உள்ளது, ஆஸ்திரியா முழுமையான பொதுமுடக்கம் அறிவித்துள்ளது.
கட்டுப்பாடுகளை எதிர்த்து, சனிக்கிழமை, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி பேரணிகள் நடத்தினார்கள். சுவிட்சர்லாந்து, இத்தாலி, குரோவேஷியா மற்றும் மாசிடோனியாவிலும் பேரணிகள் நடத்தப்பட்டன.
இப்படி ஐரோப்பாவில் கொரோனா பரவலும், கட்டுப்பாடுகளும், அவற்றிற்கு எதிர்ப்புகளும் உருவாகியுள்ள நிலையில், பிரித்தானிய அமைச்சர்களும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தவேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், பிரித்தானிய மக்களை தடுப்பூசி பெற்றுக்கொள்ள கட்டாயப்படுத்துவதைத் தன்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறியுள்ள பிரித்தானிய சுகாதாரச் செயலரான சாஜித் ஜாவித், தடுப்பூசி பெறுவது மக்களின் முடிவாகத்தான் இருக்கவேண்டும் என்றார்.
தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறு மக்களை அறிவுறுத்துவதுதான் சிறந்ததாக இருக்கும் என்று கூறியுள்ள அவர், பிரித்தானியர்கள் அனைவரையும் சட்டப்படி கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளச் செய்யும் ஒரு திட்டம் ஒருபோதும் இருக்காது என்றார்.
அதாவது, பிரித்தானியாவில் கட்டாய தடுப்பூசி திட்டம் இல்லை என சாஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.
மீண்டும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தும் நிலை பிரித்தானியாவில் இப்போதைக்கு ஏற்படவில்லை என்றும், கூடுதலாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டிவந்தால் அப்போது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறுகிறார் அவர்.