இரண்டே மாதங்களில் சிக்கிய புல்லட் பைக்குடன் ESCAPE-ஆன காதல் ஜோடி!
சேலத்தில் இரு சக்கர வாகனத்தை டெஸ்ட் ட்ரைவ் செய்வதாய் கூறி புல்லட் வாகனத்துடன் எஸ்கேப்பான காதல் ஜோடியை கோலாரில் மற்றொரு இடத்தில் திருடும் போது போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
சேலம் டவுன் சாந்தி தியேட்டர் பகுதியில் ராம் பாலாஜி என்பவருக்கு சொந்தமான, பழைய இரு சக்கர வாகனங்களை வாங்கி, விற்பனை செய்யும் கன்சல்டிங் உள்ளது.
இந்த கன்சல்டிங் கடைக்கு கடந்த ஜனவரி 23 ஆம் தேதி இரண்டு இளம் ஜோடியினர் வந்துள்ளனர்.
ஒரு புல்லட் ஒன்று வாங்க வந்திருப்பதாக கூறி, அங்கிருந்த விலை உயர்ந்த டுவீலர்களை அவர்கள் சிறிது நேரம் பார்வையிட்டுள்ளனர்.
இதில் 1.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு டுவீலரை தேர்வு செய்துள்ளனர் . பின்னர் வண்டியை, ஓட்டிப்பார்த்து விட்டு வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
கடை ஊழியர்களும், இன்னொரு ஜோடி இருக்கிறதே என்ற எண்ணத்தில் நம்பி வண்டியை எடுத்துப்போக அனுமதித்துள்ளனர்.
நீண்ட நேரம் ஆன நிலையில் திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் , இன்னொரு ஜோடியிடம் அவர்களை தொலைபேசியில் அழைக்குமாறு கேட்டுள்ளனர்.
ஆனால், அவர்கள் யார் என்றே எங்களுக்கு தெரியாது என்றும் நாங்கள் தனியாக வந்துள்ளோம் என்றும் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், கடை உரிமையாளர் ராம் பாலாஜிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் கடையில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் பதிவான காட்சிகளை பார்த்து, இரண்டு ஜோடிகளுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்த ஊழியர்கள், கடையில் இருந்த இன்னொரு ஜோடியை பிடித்து டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்து ஒப்படைத்தனர்.
காவல்துறையினர் விசாரித்தபோது, வண்டியில் சென்ற பெண்ணை மட்டும் எங்களுக்கு தெரியும் என பிடிபட்ட ஜோடி கூறியுள்ளனர்.
அதன் பேரில் தகவல் தெரிவிக்கப்பட்டு, வண்டியில் சென்ற பெண்ணின் உறவினர்கள் டவுன் குற்றப்பிரிவுக்கு வந்தனர்.
காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் வண்டியை ஓட்டிச்சென்ற வாலிபர் கிருஷ்ணகிரி அருகில் உள்ள குப்பத்தை சேர்ந்த பிரவின் குமார் என்பது தெரியவந்துள்ளது.
வண்டியில் சென்ற பெண் அவரை காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் சேலம் டவுன் குற்றப் பிரிவு போலீசார், வண்டியை எடுத்துச் சென்ற காதல் ஜோடியை தேடி வந்தனர்.
தலைமறைவாக இருந்த இருவரும் பெங்களூரில் இருப்பதாக கடந்த மார்ச் மாதம் தகவல் வந்த நிலையில் சேலம் டவுன் காவல்துறையினர் தனிப்படை அமைத்து பெங்களூர் சென்றனர்.
தேடப்பட்டு வந்த இருவரும் பெங்களூரை அடுத்த கோலார் மாவட்டத்தில் வாகன திருட்டில் ஈடுபட்ட போது கோலார் காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து விசாரணையில் இவர்கள் இருவரும் இணைந்து பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
தகவலறிந்து கோலார் சென்ற சேலம் டவுன் காவல்துறையினர் காதல் ஜோடியை கைது செய்து சேலம் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.