சனம் ஷெட்டியிடம் மைக் பறிக்கப்பட்டதா? நீட் போராட்டத்தில் நடந்தது என்ன?
நீட் எதிர்ப்பு போராட்டத்தில் தன்னிடம் மைக்கை பறித்து வெளியே அனுப்பியதாக நடிகை சனம் ஷெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை நீட் எதிர்ப்பு போராட்டம்
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி(CJP) கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறது.

இதே போல், சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில், CJP கட்சியினர், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து பேசி வருகின்றனர்.
சிலர் புரட்சிகரமான பாடல்களை பாடி வருகின்றனர். சினிமா பாடல்களை பாட வேண்டாம் என போரட்ட குழு கோரிக்கை விடுத்துள்ளது.
போராட்டத்தில் தளபதி ரசிகை என பேசிய சனம் ஷெட்டி
நேற்று இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை சனம் ஷெட்டி, "இந்த போராட்டம் மாணவர்களுக்கான போராட்டம்,. இந்த மேடையை Political agenda க்காக பயன்படுத்துற யாராக இருந்தாலும் அவங்க தான் ஜோக்கர்ஸ். நாங்க இல்லை. நான் தளபதி ரசிகை, ஜனநாயகன் FDFS பார்த்துவிட்டு தான் வந்திருக்கிறேன்" என பேசினார்.

நீட் எதிர்ப்பு போராட்டத்தில், தளபதி ரசிகை, ஜனநாயகன் FDFS என போராட்டத்திற்கு சம்மந்தம் இல்லாத விடயங்கள் குறித்து பேசியதால் அங்கிருந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மைக்கை தருமாறு கேட்டு உங்களுக்கு தெளிவுபடுத்துவதாக கூறியுள்ளனர்.
போலி போராட்டம் என விமர்சனம்
ஆனால் அங்கிருந்து ஆவேசமாக வெளியேறிய நடிகை சனம் ஷெட்டி, தன்னிடம் மைக்கை பறித்து தன்னை பேச அனுமதிக்கவில்லை, இது ஒரு போலியான போராட்டம் என விமர்சித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "மாணவர்கள் சார்ந்த போராட்டம் என்றும், அவர்களுக்காகப் குரல் கொடுக்குமாறும் கூறித்தானே என்னை அழைத்தார்கள்? அதைத்தானே நானும் இங்கு பேசிக்கொண்டிருக்கிறேன்.

ஆனால், அழைத்துப் பேச வைத்துவிட்டு, நான் ஒரு திரைப்படம் பார்த்ததற்காக என்னை 'ஜோக்கர்' என்று விமர்சிக்கிறார்கள். ஒரு திரைப்படம் பார்த்த காரணத்திற்காகவே நான் ஜோக்கர் ஆகிவிடுவேனா? இங்கே மேடையில் இயக்குநர் வெற்றிமாறன் அமர்ந்திருக்கிறாரே, அவர் எத்தனையோ திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்; அப்படியென்றால் அவரையும் சேர்த்துத்தான் ஜோக்கர் என்று சொல்கிறீர்களா?
இவர்கள் ஜனநாயகத்திற்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்கிறார்கள். ஆனால், நான் மைக்கில் பேசிக்கொண்டிருக்கும் போதே அதைப் பிடுங்குகிறார்கள். இதுதான் இவர்கள் பின்பற்றும் ஜனநாயகத்தின் லட்சணமா? உண்மையில் இவர்கள் ஜனநாயகத்திற்காகப் போராடவில்லை, ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை வைத்துக்கொண்டுதான் போராடுகிறார்கள். இது முற்றிலும் ஒரு போலிப் போராட்டம்
விளம்பரத்திற்காக அனுமதியின்றி தலைமை செயலகம் வெளியே போராட்டம் நடத்தினால் கைது செய்ய தான் செய்வார்கள்" என பேசியுள்ளார்.
சனம் ஷெட்டியின் செயலுக்கு எதிர்ப்பு
சனம் ஷெட்டியின் செயலுக்கு சமூகவலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இங்கு பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்களும் கலந்து கொண்டு பேசியுள்ளனர். ஆனால் இது போன்று யாரும் போராட்டத்தை குறை சொல்லவில்லை. நாங்கள் தவெக கட்சியை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்குமாறு தான் அழைப்பு விடுத்துள்ளோம். இது அனைவருக்குமான போராட்டம்.
ஆனால் சனம் ஷெட்டி இங்கு மாணவர்கள் எத்தனை பேர்?, CJP கட்சியினர் எத்தனை பேர் என கேள்வி எழுப்பியது தவறானது என அங்குள்ள போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் நீட் மற்றும் அரசியல் சார்ந்து பேசி வரும் நிலையில், அங்கு சென்று தளபதியின் தீவிர ரசிகை என போராட்டதிற்கு சம்மந்தமில்லாமல் பேசியது ஏன் எனவும், இந்த போராட்டத்தில் என்ன Political Agenda உள்ளது எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், இந்த போராட்டத்திற்கு யாரும் சொல்லி இங்க நான் வரவில்லை நானாக வந்திருக்கிறேன் என மேடையில் பேசிவிட்டு, வெளியே வந்து மாணவர்கள் சார்ந்த போராட்டம் அவர்களுக்காக குரல் கொடுக்குமாறும் கூறித்தானே என்னை அழைத்தார்கள்? அவ்வளவு பயம் இருந்தால் ஏன் கூப்பிட வேண்டும்?" என முரணாக பேசுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |