காலில் மின்னணுப்பட்டை அணிவதிலிருந்து தப்பினார் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலஸ் சார்க்கோஸி பல்வேறு ஊழல் வழக்குகளை எதிர்கொண்டுவரும் நிலையில், ஒரு வழக்கில் அவர் காலில் மின்னணுப்பட்டை அணிவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு ஊழல் வழக்குகள்
2007ஆம் ஆண்டு, சார்க்கோஸி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தல் பிரச்சார செலவுகளுக்காக லிபியா நாட்டின் சர்வாதிகாரியான முஅம்மர் அல் கடாஃபி, சார்க்கோஸிக்கு பல மில்லியன் யூரோக்கள் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்துவந்தது.

சார்க்கோஸி வழக்கில், அவர் மீதான, சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டு மட்டும் உண்மை என முடிவு செய்த நீதிமன்றம் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் 21ஆம் திகதி அவர் சிறையிலடைக்கப்பட்டார்.
ஆனால், மூன்றே வாரங்களில் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார்.
இந்நிலையில், 2012ஆம் ஆண்டு, மீண்டும் தேர்தலில் போட்டியிடும் முயற்சியின்போது, அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பணம் செலவு செய்ததாகவும், அதை மூடி மறைக்க முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அது தொடர்பான வழக்கொன்று நடந்துவரும் நிலையில், அந்த வழக்கில் அவர் காலில் மின்னணுப்பட்டை அணியத் தேவையில்லை என நீதிமன்றம் கூறிவிட்டது.
சார்க்கோஸிக்கு 71 வயதாகிறது. ஆகவே, அவரது வயதைக் காரணம் காட்டி, அவர் காலில் மின்னணுப்பட்டை அணியத் தேவையில்லை என நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |