கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும், கரூர் மாவட்ட காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும் வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு(SIT) அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.
அதேவேளையில், சிபிஐ விசாரணை கோரி தவெக, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
சிபிஐ விசாரணை
இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளனர். இந்த குழுவில் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்டிராத 2 ஐபிஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள்.
மாதம் ஒரு முறை இந்த குழுவிடம், சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அதைத்தொடர்ந்து, பரப்புரை குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரிய வழக்கு, கிரிமினல் வழக்காக பட்டியலிடப்பட்டது எப்படி? என உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது.
SIT விசாரணைக்கு உத்தரவிட்டது எப்படி என்றும் சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மனுதாரர்களுக்கு தெரியாமலேயே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இது ஒரு மிகப்பெரிய மோசடி, இதனை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |