15 வயது மாணவிக்கு சக மாணவர்களால் நேர்ந்த கொடூரம்! அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை சக மாணவர்கள் கூட்டு வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ஆவிங்குடியில் உள்ள பள்ளியில் மாணவி ஒருவர் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
குறித்த மாணவி, கடந்த மே 22ஆம் திகதி அதே பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவனின் பிறந்தநாள் விழாவுக்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அந்த மாணவன் குறித்த மாணவியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் அந்த புகைப்படத்தை தனது சக மாணவர்களுக்கு அனுப்பியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, குறித்த மாணவியை கடந்த 1ஆம் திகதி அந்த புகைப்படத்தை காட்டி மிரட்டிய சக மாணவர் ஒருவர், தன்னுடன் வீட்டிற்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளார். அவரது வீட்டில் ஏற்கனவே இரண்டு மாணவர்கள் இருந்துள்ளனர். அவர்கள் மூவரும் சேர்ந்து குறித்த மாணவியை கூட்டு வன்புணர்வு செய்து, அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளனர்.
அதன் பின்னர் அந்த வீடியோவை அவர்களே தமது நண்பர்கள் பலருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில், பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மாணவியிடம் அவரது தாயார் விசாரித்த போது அவர் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, மாணவியின் தாய் பொலிசில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். உடனடியாக மாணவியிடம் விசாரணை நடத்திய பொலிசார் மூன்று மாணவர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவியும், கைது செய்யப்பட்ட மாணவர்களும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்படாமல் இருக்க பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.