சிவசங்கர் பாபா பெற்றோர்கள் முன்னிலையில் மாணவிகளை கட்டிபிடிப்பார்! ஒரு குருவாக.. செய்தியாளர்கள் முன் தோன்றி பேசிய பெண் ஆசிரியைகள்
சிவசங்கர் பாபா பெற்றோர்கள் முன்னிலையில் தான் மாணவிகளை கட்டிப்பிடிப்பார் என அவர் நடத்தி வந்த பள்ளியின் ஆசிரியைகள் கூறியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே உள்ள சாத்தங்குப்பம் பகுதியில் உள்ள சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா.
இவர் கடந்த 20 ஆண்டுகளாக அந்த பள்ளியை நடத்தி வருகிறார். இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் 3 பேர் கொடுத்த புகார் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிவசங்கர் பாபா மீதான வழக்கை செங்கல்பட்டு சி.பி.சி.ஐ.டி. பொலிசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து இரவோடு, இரவாக பாபாவை சென்னைக்கு சி.பி.சி.ஐ.டி. பொலிசார் அழைத்து வந்தனர். இதனை தொடர்ந்து சென்னை எழும்பூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சிவசங்கர் பாபா, பின்னர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்பிறகு, சிவங்கர் பாபாவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி அம்பிகா உத்தரவிட்டார்.
பின்னர், சிவசங்கர் பாபா செங்கல்பட்டு மாவட்ட சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில், சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, சிவசங்கர் பாபாவுக்கு டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர் குறித்து விசாரணைக்கு வந்த குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளிடம் ஆவணங்களை ஒப்படைத்தோம். சிபிசிஐடி பொலிசார் கேட்ட ஆவணங்களையும் அளித்தோம். பள்ளியில் வந்து விசாரணை நடத்திய அதிகாரிகள் கேட்ட ஆவணங்களை அளித்துள்ளோம்.
சிபிசிஐடி விசாரணை முடியும் வரை வதந்திகளை பரப்ப வேண்டாம். விசாரணையில் நிச்சயம் நல்ல முடிவு வரும். சிவசங்கர் பாபாவை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியதாக வந்த தகவல் தவறானது.
சிவசங்கர் பாபா எங்கேயும் தப்பி ஓடவில்லை.
அவர் பெற்றோர்கள் முன்னிலையில் தான் மாணவிகளை கட்டிப்பிடிப்பார், ஒரு குருவாக தான் தொடுவார்.
அது நல்ல தொடுதலாக தான் இருக்கும் என ஆதரவாக பேசியுள்ளனர்.