அமெரிக்காவில் புற்றுநோயால் இறந்ததாக கூறப்பட்டவர் ஸ்கொட்லாந்து மருத்துவமனையில் கைது: பகீர் பின்னணி
அமெரிக்காவில் பல மாகாணங்களில் துஸ்பிரயோக வழக்கில் சிக்கியுள்ள ஒருவர், கிளாஸ்கோ மருத்துவமனையில் கைதாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபருக்கு எதிராக இன்டர்போல் விடுத்த சிவப்பு அறிவிப்பு காரணமாகவே கிளாஸ்கோ பொலிசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்க நாட்டவரான 34 வயது Nicholas Alahverdian கிளாஸ்கோவில் அமைந்துள்ள குயின் எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனையில் கொரோனா தொற்றால் இறக்கும் தருவாயில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு கடைசியில் கைது செய்யப்பட்டார்.
ஸ்கொட்லாந்து பொலிசாரிடம் தமது பெயர் Arthur Knight என தெரிவித்திருந்த அவர், இதற்கு முன்னர் 8 பெயர்களில் அறியப்பட்டதாக அமெரிக்க மாகாண பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் தமது சொந்த மாநிலத்தில் சிறார்கள் உரிமைக்காக குரல் கொடுப்பவர் என பெயர் பெற்றிருந்த Alahverdian, அமெரிக்க நீதி விசாரணைகளில் இருந்து தப்ப, 2020 பிப்ரவரியில் புற்றுநோய் காரணமாக இறந்ததாக ஒரு போலியான தகவலை பரப்பினார்.
அவர் குடியிருந்த பகுதி மக்களும் இதை நம்பியதாகவே கூறப்படுகிறது. அங்கிருந்து தப்பியவர் ஸ்கொட்லாந்துக்கு பயணப்பட்டுள்ளார். தற்போது ஸ்கொட்லாந்தில் இருந்து அவரை நாடு கடத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2008ல் இரண்டு பாலியல் துஸ்பிரயோக வழக்கில் சிக்கியுள்ளார் Alahverdian. ஆனால் 2017 வரையில் தேசிய டி.என்.ஏ பதிவேட்டில் இவர் தொடர்பில் எந்த தரவுகளும் பதிவாகவில்லை.
Rhode Island பகுதியில் மட்டுமின்றி, அமெரிக்காவின் பல மாகாணங்களில் இவர் மீது பாலியல் துஸ்பிரயோக வழக்கு பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையிலேயே நீதி விசாரணைகளில் இருந்து தப்பிக்க, தாம இறந்ததாக புரளியை பரவவிட்டு, ஸ்கொட்லாந்துக்கு தப்பி வந்துள்ளார்.
தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் அடையாளம் காணப்பட்டு பின்னர் கைதாகியுள்ளார்.