பிரித்தானியாவில் விபத்தில் உயிரிழந்த கோயம்புத்தூரைச் சேர்ந்த இளைஞர்: இரண்டாவது நபர் மீது குற்றச்சாட்டு
இந்தியாவிலிருந்து கனவுகளுடன் பிரித்தானியாவுக்குச் சென்ற ஒருவரது உயிர் அநியாயமாக பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றொரு நபர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கனவுகளுடன் பிரித்தானியாவுக்குச் சென்ற இந்தியர்
ஹொட்டல் தொழிலில் சாதிக்கும் கனவுகளுடன் இந்தியாவின் கோயம்புத்தூரிலிருந்து இங்கிலாந்திலுள்ள Reading என்னும் நகருக்குச் சென்றவர் விக்னேஷ் பட்டாபிராமன் (38).
ஆனால், காதலர் தினத்தன்று, அதாவது, பிப்ரவரி மாதம் 14ஆம் திகதி, இரவு 11.50 மணிக்கு, பணி முடித்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த விக்னேஷ் மீது வாகனம் ஒன்று மோதியுள்ளது.
மோதியவர் வாகனத்துடன் தப்பிச் செல்ல, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட விக்னேஷ் சிகிச்சை பலனின்று பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தா, கொலையா?
இந்த சம்பவம் ஒரு விபத்து என முதலில் கருதப்பட்ட நிலையில், பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ஷாஸேப் காலித் (Shazeb Khalid, 24) என்பவரும், அவருக்கு உதவியதாக 20 முதல் 48 வயது வரையுள்ள மேலும் ஏழு பேர் கைது செய்யப்பட்டார்கள்.
சைக்கிளில் சென்று கொண்டிருந்த விக்னேஷ் மீது மோதிய காரில் இருந்த ஒருவர் அவரைத் தாக்கியது தெரியவந்துள்ளதாகவும் பின்னர் பொலிசார் தெரிவித்தார்கள்.
ஆக, அது விபத்தல்ல, கொலை என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
கலைந்த கனவுகள்
இந்தியாவில் பிறந்த விக்னேஷ், ஒரு வருடத்திற்கு முன் பிரித்தானியாவுக்கு வந்துள்ளார். அவரும் இந்தியக் குடிமகளான அவரது மனைவியான ரம்யாவும் Reading என்ற இடத்தில் வாழ்ந்துவந்தார்கள்.
விக்னேஷ் கொல்லப்பட்ட அன்றுதான் அவருக்கு புதிதாக லண்டனில் ஒரு பணி கிடைத்துள்ளது. லண்டனில் ஹொட்டல் ஒன்றை நிர்வகிக்கும் கனவுகளுடன் வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த விக்னேஷின் கனவுகளும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரின் கனவுகளும் அன்றிரவே கலைந்துபோயின.
இரண்டாவது நபர் மீது கொலைக் குற்றச்சாட்டு
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஷாஸேப் காலித் என்பவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, Rossby எனுமிடத்தைச் சேர்ந்த Soiheem Hussain (27) என்னும் நபர் மீதும் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர், நேற்று இங்கிலாந்திலுள்ள ரெடிங் கிரௌன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். ஆகத்து மாதம், இந்த சம்பவம் தொடர்பில் வழக்கு விசாரணை துவங்க உள்ளது.
விக்னேஷ் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக ஒரு 20 வயதுப் பெண்ணும், 20 முதல் 48 வயது வரையுடைய ஏழு ஆண்களும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்கள்.
சைக்கிள் மீது கார் மோதிய விபத்து என கருதப்பட்ட ஒரு சம்பவம், 10 பேர் கைது, இரண்டு பேர் மீது கொலைக்குற்றச்சாட்டு என பெரிதாகிக்கொண்டே செல்வது மென்மேலும் சந்தேகங்களை உருவாக்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |