இன்று ராஜ குடும்பத்தில் ஒரு முக்கியமான நாள்: திருமண நாள் விழாவைக் கொண்டாடும் தம்பதி
இன்று பிரித்தானிய இளவரசர் வில்லியமும், இளவரசி கேட்டும், தங்கள் 13ஆவது திருமண நாள் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
இந்த நாளில், வில்லியம் கேட் வாழ்வில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளை இங்கு காணலாம்.
காதலாக மாறிய நட்பு
இளவரசர் வில்லியமும் கேட்டும், புனித ஆண்ட்ரூ பல்கலையில் படிக்கும்போதுதான் முதன்முதலில் சந்தித்துக்கொண்டார்கள். முதலில் நண்பர்களாக பழகியவர்கள், பின்பு காதலர்களாக மாறினார்கள்.
மனதைத் திருடிய கேட்
குறிப்பாக, 2003ஆம் ஆண்டு, பல்கலையில் நடைபெற்ற ஒரு ஃபேஷன் ஷோவின்போது, கேட்டின் அழகில் மயங்கிய வில்லியம், அவரிடம் தன் மனதைப் பறிகொடுத்தார்.
காதல் ஆழமாக, 2004ஆம் ஆண்டு, தங்கள் காதலை உலகுக்கு அறிவித்தது, வில்லியம் கேட் ஜோடி. 2005ஆம் ஆண்டு இருவரும் படித்து முடித்து பட்டம் பெற்றார்கள்.
பிரிந்து சேர்ந்த ஜோடி
எதிர்பாராதவிதமாக, 2007ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் வில்லியம் கேட் ஜோடி பிரிந்தது. என்றாலும், 2007ஆம் ஆண்டு மீண்டும் இணைந்தார்கள் வில்லியமும் கேட்டும். 2010ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 16ஆம் திகதி, வில்லியம் கேட் ஜோடிக்கு நிச்சயதார்த்தம் ஆனது.
திருமணம்
2011ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி, அதாவது, 13 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் இளவரசர் வில்லியமுக்கும் கேட்டுக்கும் லண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
விடயம் என்னவென்றால், அப்போது எலிசபெத் மகாராணி உயிருடன் இருந்தார். ஆகவே, அவருக்கு அடுத்து அரியணையேறுபவர் சார்லஸ்தான் என்பதால், இளவரசர் வில்லியமுடைய திருமணம், முழுமையாக அரசு மரியாதையுடன் நடைபெறவில்லையாம்.
மூன்று பிள்ளைகள்
காதலிக்கும்போது அவ்வப்போது உரசல் இருந்தாலும், திருமணத்துக்குப்பின் ஒருமுறைகூட தம்பதியருக்குள் கருத்துமோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானதில்லை. 2013ஆம் ஆண்டு, தங்கள் மூத்த மகனான ஜார்ஜையும், 2015ஆம் ஆண்டு இரண்டாவது மகள் சார்லட்டையும், 2018ஆம் ஆண்டு தங்கள் மூன்றாவது மகனான லூயிஸையும் பெற்றெடுத்தார் இளவரசி கேட்.
வேல்ஸ் இளவரசர்
மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து, இளவரசர் சார்லஸ் மன்னராக, 2022ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி, இளவரசர் வில்லியம் வேல்ஸ் இளவரசரானார். அரியணையேறும் வரிசையில் அடுத்து இருப்பதும் அவர்தான்.
மாறிய வாழ்க்கைச் சூழல்
இந்நிலையில், 2024ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 22ஆம் திகதி, தனக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவித்தார் இளவரசி கேட். இன்று வில்லியம் கேட் தம்பதியர் தங்கள் 13ஆவது திருமண நாள் விழாவைக் கொண்டாடுகிறார்கள். ஒரு பக்கம் மன்னர் சார்லசுக்கு புற்றுநோய், மறுபக்கம் இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் என ராஜ குடும்பம் சோகமான ஒரு சுழலைக் கடந்து செல்கிறது.
என்றாலும், புற்றுநோய் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இளவரசி கேட்டுக்கும், மனைவியை அக்கறையுடன் கவனித்துக்கொள்ளும் அவரது காதல் கணவரான வில்லியமுக்கும் தங்கள் வாழ்வில் இது ஒரு முக்கியமான தருணம் என்பதை மறுப்பதற்கில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |