14 உயிர்களின் மூச்சுக்காற்றை நிறுத்திய ஸ்டெர்லைட் மூலம் சுவாசக்காற்றை உற்பத்தி செய்வதா... கொந்தளித்த சீமான்
மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆக்சிஜன் உற்பத்தியெனும் பெயரில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது மண்ணின் மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுக்க நிலவும் அசாதாரணமான சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்வதாய்க் கூறி, மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முனையும் வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகளும், எதிர்க்கட்சிகளும் துணைபோயிருப்பது வேதனையளிக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதும், அதனைப் பகிர்ந்தளிப்பதும் நடைமுறையில் மிகக்கடினமானது என்பதையும், அதன் மூலம் பெருமளவு சுவாசக்காற்று உற்பத்திசெய்து பயனடைய சாத்தியமே இல்லை என்பதையும் தமிழக அரசே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட பிறகு, ஆலையைத் திறக்க முன்வந்திருப்பது கேலிக்கூத்தாகும்.
இத்தோடு, உற்பத்தியாகும் ஆக்சிஜன் மத்தியத் தொகுப்புக்குத்தான் அனுப்பப்படும் எனவும், அதில் தமிழகத்திற்கு எவ்வித முன்னுரிமையும் இல்லை என்று மத்திய அரசு நேற்றையதினம் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இது தமிழர்களின் உணர்வைச் சீண்டி, நிலத்தின் நலனைச் சுரண்டி கொழுக்கும் தமிழர் விரோதப்போக்காகும்.
14 உயிர்களின் மூச்சுக்காற்றை நிறுத்திய ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் சுவாசக்காற்றை உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளிப்பதாகக் கூறுவது அபத்தம்; வெட்கக்கேடு.
மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆக்சிஜன் உற்பத்தியெனும் பெயரில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது மண்ணின் மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்!https://t.co/FD6pJtP3nt pic.twitter.com/bv5T0qzJzm
— சீமான் (@SeemanOfficial) April 28, 2021
ஆகவே, ஆக்சிஜன் உற்பத்திக்கு மாற்று வழிகளையும், வாய்ப்புகளையும் நாடாமல், எத்தனையோ தொழில்நுட்பங்கள் இருந்தும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைத் தொடங்காமல், பேரிடர் கால நெருக்கடிச் சூழலை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக மாற்ற முனைவதும், தமிழர்களுக்கும், தமிழர் நிலத்துக்கும் தீங்கையும், சூழலியல் கேட்டையும் தந்து, தமிழர்களின் உயிர்களைக் குடித்த ஸ்டெர்லைட் ஆலையை, ஆக்சிஜன் உற்பத்தி எனும் பெயரில் செயல்பாட்டுக்குக் கொண்டுவர துணைநிற்பதும் மன்னிக்கவே முடியாத வரலாற்றுப்பெருந்துரோகமாகும்.
இதனைச் செய்திட்ட அதிமுக, திமுக எனும் இரு கட்சிகளுக்கும் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.