அற்ப அரசியலுக்காக இசுலாமியப்பெண்களின் உடை உரிமையை மறுப்பதா? கொந்தளித்த சீமான்
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளிகளுக்கு வர எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்தள்ளார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை, கர்நாடக மாநிலத்தின் கல்விக்கூடங்களில் இசுலாமியப்பெண்கள் தங்களது மார்க்கத்தின்படி, உடை உடுத்தி வருவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து, கடந்த சில வாரங்களாக மதவெறி இந்துத்துவக்கும்பல் நிகழ்த்தி வரும் வன்முறை வெறியாட்டங்களும், பிரித்தாளும் சூழ்ச்சிகளும் அதிர்ச்சியளிக்கின்றன.
கல்விக்கொள்கையையும், தேர்வு முறையையும் காவிமயப்படுத்தும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, தற்போது மாணவர்களின் மனங்களிலும் மதவாத நச்சுப்பரப்புரையை விதைத்து மதமோதலுக்கு வித்திடுவது கடும் கண்டனத்திற்குரியது.
தங்களது அரசியல் ஆதாயத்திற்காகவும், தன்னலப்போக்குக்காகவும் மாணவர்கள் மத்தியில் மதவுணர்ச்சியைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் இந்துத்துவக்கூடாரத்தின் இழிஅரசியலை வன்மையாக எதிர்க்கிறேன்.
கர்நாடகாவில் மதவெறிக்கும்பலால் அரங்கேற்றப்படும் நாசகாரச்செயல்பாடுகளுக்கு இளைய தலைமுறைப்பிள்ளைகள் இரையாகாமல் காப்பாற்றக் களமிறங்கி, மதவாதத்திற்கு எதிராக மனிதம் காக்கவும், மக்களை நல்வழிப்படுத்தவுமாக சனநாயகப்பேராற்றல்களும், மானுடப்பற்றாளர்களும் ஒன்றிணைய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
அற்ப அரசியலுக்காக இசுலாமியப்பெண்களின் உடை உரிமையை மறுப்பதா?
— சீமான் (@SeemanOfficial) February 9, 2022
மோடியின் ஆட்சியில் குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட இசுலாமிய மதவெறிப்படுகொலைகளை நாடு முழுமைக்கும் அரங்கேற்றத் துடிப்பதா?https://t.co/NwhHg2P9fY pic.twitter.com/6RrZS8r8sp
இத்தோடு, அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடைபெற்று வரும் மதவெறிச்செயல்கள் தமிழ்நாட்டிலும் தலைதூக்காது தடுக்க மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டு, இந்துத்துவக்கும்பலை இரும்புக்கரம் கொண்டு, சட்டத்தின் துணைநின்று ஒடுக்க வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என சீமான் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.