மத்திய அரசின் இச்செயல் தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.. பச்சைத்துரோகம்! கொந்தளித்த சீமான்
தமிழகத்திற்கே ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ள சூழலில், மத்திய அரசின் உத்தரவின் பேரில் சென்னையில் இருந்து ஆந்திரா மற்றும் தெலங்கானாவிற்கு ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதை நாம் தமிழர் கட்சியின் தமைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வன்மையாக கண்டித்துள்ளார்.
மத்திய அரசு உத்தரவின்படி சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆந்திரா மற்றும் தெலங்கானாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஐனாக்ஸ் ஆலை தான் சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் உற்பத்தியாகும் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசின் ஒப்புதலோ, அனுமதியோ இல்லாமல் தான்தோன்றித்தனமாக எதேச்சதிகாரப்போக்கோடு ஆந்திரா, தெலுங்கானாவுக்கு அனுப்பி வைத்திருக்கும் மத்திய அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது.
கொரோனா இரண்டாம் அலை வீரியமாகப் பரவிக் கொண்டிருக்கும் தற்காலப் பேரிடர் சூழலில் கூட்டாட்சித் தத்துவத்திற்கே குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆக்சிஜனை, தமிழக அரசுக்குத் தெரியாது வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் முடிவை எடுத்திருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் ஏப்ரல் இறுதிக்குள் 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவையாக இருக்குமென எதிர்பாக்கப்படும் இந்நேரத்தில் தமிழகத்தில் உற்பத்தியாகிற ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பினால் உற்பத்தி செய்கிற தமிழகம் அம்மாநிலங்களைவிடக் குறைவான அளவே ஆக்சிஜனைக் கொண்டிருக்கும்.
சரிசமமான வழங்கலை முடுக்கிவிடாமல் கையாலாகத்தனத்தை மறைக்க தமிழகத்திலுள்ள 80,000 கொரோனா தொற்றுக்கு ஆளான நோயாளிகளுக்குரிய ஆக்சிஜனை அபகரித்து அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி முறையற்றப் பரிமாற்றத்தை செய்து வரும் மத்திய அரசின் செயல் தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி; பச்சைத்துரோகம் என சீமான் வன்மையானக் கண்டனம் தெரிவித்துள்ளார்.