இது கொடுந்துரோகமாகும்.. இதை கைவிட வேண்டும்! ஈழ அரசியல் தலைவர்களுக்கு சீமான் கோரிக்கை
13வது சட்டத்திருத்தத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த இந்திய அரசிடம் கோரும் முடிவைக் கைவிட வேண்டுமென ஈழ அரசியல் தலைவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் ஒற்றைமயமான வல்லாதிக்க அரசாங்கத்தின் கீழ் ஒருங்கிணைந்து தமிழர்கள் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தவும், 13வது சட்டத்திருத்தத்தை முழுமையாகச் செயல்படுத்தவும் வேண்டுமெனக்கோரி இந்தியப் பிரதமர் மோடியிடம் அந்நிலத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர் பெருமக்கள் கோரிக்கை வைத்திருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது.
சுதந்திரத் தமிழீழக்குடியரசு அமைவதொன்றே ஈழத்தமிழ் மக்களுக்கான ஒற்றைத்தீர்வு!https://t.co/WlS6hE7eUF pic.twitter.com/8XUzbSNdwB
— சீமான் (@SeemanOfficial) January 29, 2022
இந்நூற்றாண்டின் பாரிய இனப்படுகொலையை ஈழத்தாயகத்தில் நிகழ்த்தி, ஏறக்குறைய இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றுகுவித்தப் பிறகும் ஒற்றை இலங்கைக்குள் தமிழர்களை சிங்களர்களோடு ஒன்றிணைந்து வாழக்கோருவது மிகப்பெரும் அடிமைத்தனமாகும். ஈழப்படுகொலையைக் கண்முன்னே கண்ட ஈழ அரசியல் தலைவர்களே அதனை வலியுறுத்துவது பெரும் வேதனையைத் தருகிறது.
13வது சட்டத்திருத்தம் தமிழர்களுக்கு எவ்வித அதிகாரப்பகிர்வையோ, சமஉரிமையையோ, எத்தகைய தீர்வையோ பெற்றுத்தராது. அத்தகைய மோசமான 13வது சட்டத்திருத்தத்தைக் காலங்கடந்து, தமிழர்கள் மீது செலுத்த முற்படுவது வரலாற்றுத்துரோகமாகும்.
சுதந்திரத் தமிழீழக் குடியரசு ஒன்றே ஈழத்தமிழ் மக்களுக்கான ஒற்றைத்தீர்வு என்பதே எவராலும் மறுக்கவியலா வரலாற்றுப்பேருண்மையாகும்.
ஆகவே, தேசியத்தலைவரால் நிராகரித்திட்ட 13வது சட்டத்திருத்தத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த இந்திய அரசிடம் கோரும் முடிவைக் கைவிட வேண்டுமெனவும், இனப்படுகொலைக்குத் தலையீடற்ற பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணை செய்யவும், தமிழீழ விடுதலைக்கான முன்நகர்வானப் பொதுவாக்கெடுப்பினை நடத்தவுமாக அரசியல் அழுத்தத்தையும், அணிசேர்க்கையையும் அனைத்துலக நாடுகளிடமும், பன்னாட்டுச்சமூகத்திடமும் செய்ய வேண்டுமெனவும் ஈழ அரசியல் தலைவர் பெருமக்களைக் கேட்டுக்கொள்கிறேன் என சீமான் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.