கோவை மாணவி தற்கொலைக்குக் காரணமான இவர்களையும் சும்மா விடக்கூடாது! சீமான் வலியுறுத்தல்
கோவை மாணவி தற்கொலைக்குக் காரணமான பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழ் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
கோவை உக்கடம் பகுதியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட உக்கடம் அனைத்து மகளிர் காவல் துறையினர், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ சட்டத்தின் 2 பிரிவுகள் என மொத்தம் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை கைது செய்த பொலிசார், நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தி உடுமலைப் பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.
அதேவேளை, மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த விவகாரத்தில் பள்ளி முதல்வரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் சக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில். மாணவி தற்கொலைக்குக் காரணமான பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழ் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி ஆசிரியர் கொடுத்தப் பாலியல் தொந்தரவினால் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து நெஞ்சம் பதைபதைத்துப் போனேன்.
அண்மைக்காலமாக வெளிப்பட்டு வரும் கல்விக்கூடங்களில் நடைபெற்று வரும் பாலியல் கொடுமைகள் தொடர்பான செய்திகள் பெண் பிள்ளைகளின் நலவாழ்வு, அவர்களது சமூகப்பாதுகாப்பு குறித்தப் பெருங்கவலையை ஏற்படுத்துகின்றன.
மாணவி தற்கொலைக்குக் காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் https://t.co/0AeHnjVQqb
— நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@NaamTamilarOrg) November 13, 2021
மாணவியின் தற்கொலைக்குக் காரணமான கோவை சின்மயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைதுசெய்யப்பட்டது சற்றே ஆறுதலைத் தந்தாலும், அக்கொடுங்கோலனைச் சட்டத்தின் பிடியிலிருந்தும், தண்டனையிலிருந்தும் தப்பிக்கவிடாது, இனி எவருக்கும் இத்தகைய எண்ணமே எழாதவாறு தடுக்கும் வகையில் மிகக் கடுமையான தண்டனை உறுதிசெய்ய வேண்டுமெனவும், மாணவியின் மீதே பழிசுமத்தி அப்பிஞ்சை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, இளந்தளிர் கருகுவதற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன் என சீமான் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.