நாம் தமிழர் ஆட்சியின் அமைச்சரவையில் 50% பெண்களுக்கு இடம், அவைத்தலைவராக ஒரு பெண்! சீமான் அதிரடி அறிவிப்பு
மே 2ம் திகதி தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சீமான் வெளியிட்ட அறிக்கையில், நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்ற தேர்தல் 2021, நமக்கு அளப்பரிய நம்பிக்கைகளை வழங்கிய தேர்தலாக நடந்து முடிந்திருக்கிறது.
பெரிய பொருளாதார வசதிகள், குடும்பப் பின்புலம் இன்றி, சாதி மத உணர்வை சாகடித்து, தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் விடியலுக்காக, நம் இனத்தின் அரசியல் அங்கீகாரத்திற்காகக் கடும் உழைப்பை சிந்தி நீங்கள் பாடுபட்டது ஒருபோதும் வீண்போகாது.
எப்போதும் வெற்றிக்கான அடித்தளம் உழைப்பின் வியர்வையில் இருக்கிறது என்கிறார் பேரறிஞர் வால்டேர்.
இந்திய தேர்தல் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக 50 விழுக்காடு பெண்களை வேட்பாளர்களாக நிறுத்திய சாதனையை நாம் நிகழ்த்தி இருக்கிறோம்.
ஆணுக்குப் பெண் சமம் அல்ல, ஆணும் பெண்ணும் சமம் என்பதை உலகத்திற்குக் காட்ட நாளை நாம் தமிழர் கட்சியின் ஆட்சியின் அமைச்சரவையில் 50 விழுக்காடு பெண்களுக்கு இடம், மாநிலச் சட்டமன்றத்தின் அவைத்தலைவராக ஒரு பெண் எனப் பல கனவுகளை நாம் நிறைவேற்ற போகின்ற காலம் நமக்குக் கனிந்து வருகிறது.
நம்பிக்கையோடு நில்லுங்கள்!
— சீமான் (@SeemanOfficial) April 30, 2021
உறுதியாக நாம் வெல்வோம்! pic.twitter.com/q6nwmszqG0
அதிகாரமும் பொருளாதாரமும் உடைய 50 ஆண்டுகாலக் கட்டமைப்புகளைக் கொண்டிருக்கின்ற கட்சிகளுக்கு எதிராக எளியவர்கள் நாம் பெறுகிற ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றவை.
நம் உயிர் தலைவர், என் உயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் ஆன்ம பலம் நமக்கு வழிகாட்டியாக நின்றது.
பெரும் மாற்றம் ஒன்றுக்கு தமிழகம் தயாராகிவிட்டது. கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் வரும் கருத்துத் திணிப்புகளை நாம் ஒருபோதும் பொருட்படுத்த தேவையில்லை என சீமான் தெரிவித்துள்ளார்.