ஆறு தமிழர் விடுதலை வேண்டும்! கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரிய கட்சிகளை விளாசிய சீமான்
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆறு தமிழர் விடுதலை மற்றும் அக்னிபாத் திட்டத்தை கைவிடக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், 31 ஆண்டுகால சிறை வாழ்க்கைக்கு பின் விடுதலையானார். ஆனால் நளினி உட்பட ஏனைய ஆறு தமிழர்களும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும், அக்னிபாத் திட்டத்தை கைவிடக் கோரியும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி நேற்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
அப்போது அவர் பேசுகையில், 'சிதைந்து அழிந்து கொண்டிருக்கும் தமிழ் தேசிய இன மக்கள், பாதுகாப்பாக வாழ வேண்டும் என்றால் போராடித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுவிட்டார்கள் என நமது தலைவர் கற்பித்துள்ளார். இங்கே ஏழு பேர் விடுதலையை நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தோம். இப்போது ஆறு பேர் விடுதலையில் வந்து நிற்கிறது. இதில் தம்பி பேரறிவாளன் விடுதலை என்பது, அவருக்கு அவனே சாத்தியப்படுத்திக்கொண்டது.
சிறையில் இருக்கும் போது இந்த வழக்கு குறித்த நுட்பங்களை தெரிந்து கொள்வதற்காக சட்டம் படித்தார். வழக்கறிஞர்களை சந்தித்து தெளிவு பெற்றுக்கொண்டார். அவனே தொடுத்த வழக்கில் தீர்ப்பு தான் பேரறிவாளன் விடுதலை சாத்தியப்பட்டது, வேறு யாரும் பங்கேற்க முடியாது. அந்த வழக்கை நாம் தான் போட்டோம். தமிழக அரசு அதில் தன்னையும் ஒரு வாதியாக பின்னாளில் இணைத்துக் கொண்டது, அது வழக்கு போடவில்லை. ஆனால் அறிவின் விடுதலையை நீதிமன்றம் அறிவித்துவிட்டது. 161 சட்டவிதியை பயன்படுத்தினால் தமிழ்நாடு அரசு தாங்கள் தான் விடுதலையை சாத்தியமாக்கினோம் என்று கூறுவார்கள்.
நீதிபதிகள் அதற்கு வாய்ப்பு தராமல், அவர்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி 142வது சட்டவிதியின் மூலம் விடுதலை செய்துவிட்டனர். யாரும் இதில் தலையிட முடியாது. K.T தாமஸ் நேர்காணலில் கூறும்போது பேரறிவாளனுக்கு கொடுத்த தீர்ப்பே மீதமுள்ள ஆறு பேரின் விடுதலைக்கு போதுமானது. தனியாக ஒரு விடுதலை தீர்ப்பு தேவையில்லை என்றார். பிறகு ஏன் அரசு தயக்கம் காட்டுகிறது? இவர்கள் எப்படிபட்ட முகம் கொண்டவர்கள் என்பது வெளியில் தெரிய வேண்டும். அதற்காக தான் இந்த போராட்டம்.
இதே தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஏழு பேர் விடுதலை வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் இவரது தந்தை ஆட்சியில் இருந்தபோது, நளினியின் விடுதலை மாநில அரசு கையில் உள்ளது என இரண்டு முறை உயர்நீதிமன்றம் கூறியது. அதற்கு தமிழ்நாடு பதிலாக கூறியது என்னவென்றால், விடுதலை செய்ய முடியாது. அவரை விடுதலை செய்த பெரும்புள்ளிகள் வாழும் தெருவில் வந்து வாழ்வார். அதனால் அவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறியது. இதுதான் இவர்களது உண்மையான மனநிலை. இவர்கள் எப்படி விடுதலையை சாத்தியமாக்குவார்கள். ஆனால் இவர்களுக்கு தாங்கள் தான் விடுதலை செய்தோம் என்ற பெருமை வேண்டும். அப்படியானால் மீதமுள்ள ஆறு பேரையும் விடுதலை செய்துவிடுங்கள், இன்னும் பெருமை வந்து சேரும்.
எல்லோருமே உடல் நலிவுற்றுவிட்டனர். நான் ஆறு மாதம் அவர்களுடன் சிறையில் இருந்தேன். நளினியும், ரவிச்சந்திரனும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என ஒரு வழக்கை போடுகிறார்கள். ஆளுநரின் ஒப்புதல் தேவையில்லை, தமிழ்நாடு அரசே விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் கூறியது தான் அந்த வழக்கு. இதில் தமிழக அரசு என்ன சொல்கிறது என்றால், ஆளுநரை மீறி இந்த வழக்கு ஜனாதிபதியிடம் சென்றுவிட்டது. அதை மீறி விடுதலை செய்துவிட்டால் அரசியலைப்பிற்கே எதிரானதாக அமைந்துவிடும் என்றது.
இது தான் காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ், பிஜேபியின் குரல். அதே தான் திமுகவின் குரலும் கூட. பிரச்சனை தமிழினத்திற்கும், சிங்களத்திற்கும் தான். அதனை பேசி தீர்க்க வரும் தலைவர் அதை எப்படி கையாள வேண்டும். இருபுறமும் ஒரு பிரதிநிதியை அழைத்து பேசியிருக்க வேண்டும். மோடி வரை எந்த ஒரு சட்டமும் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுவதில்லை. நீட், அக்னிபாத் என நீள்கிறது. எதிர்த்து கேட்டால் நீதிமன்ற அவமதிப்பு என்கிறார்கள். பிரபாகரனை பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஒரு மாதம் சிறைப்படுத்தியது இந்த நாட்டின் அன்றைய அரசு' என கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.
அதே போல் அக்னிபாத் திட்டத்தினை கடுமையாக விமர்சித்தும் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.