விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சிக்கிறது - சீமான் தடாலடி
கரூர் துயரத்திற்கு விஜய்தான் காரணம் என்று பேசி, அவரை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சிப்பதாக நாம் தமிழர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஐஜி குழுவினர்
தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஐஜி அஸ்ரா கர்க் தலைமையிலான குழுவினர் கரூர் சென்றுள்ளனர்.
சம்பவம் ஏற்பட்ட வேலுசாமிபுரத்திற்கு சென்று பார்வையிட்ட குழு, நெரிசல் ஏற்பட காரணம் என்பது குறித்து விசாரித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி அஸ்ரா, முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், தற்போதைக்கு எதுவும் கூற முடியாது என்றும் கூறினார்.
மேலும், தங்களது குழுவில் இரண்டு எஸ்.பிக்கள், ஒரு கூடுதல் எஸ்.பி மற்றும் 5 காவல் ஆய்வாளர்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சீமான் அளித்த பதில்
இந்த நிலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஒருவருக்கொருவர் பழியைப் போட்டுக் கொள்வது வேதனையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பாஜக தவெகவுக்கு ஆதரவாக பேசுவது குறித்து சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "தெருக்களில் கூட்டம் நடத்துவதைவிட, ஓரிடத்தில் கூட்டம் என்று அழைப்பு விடுத்து, பேசிவிட்டு கிளம்பிவிடலாம். தெருக்களுக்குள் செல்வதால் எப்போதும் நெரிசலைத்தான் உண்டாக்கும். ஆனால், எல்லோரும் அதனைத்தான் செய்கின்றனர்.
இந்த மாதிரியான பரப்புரையை நிறுத்திக் கொள்ளுதல் அல்லது மாற்றிக் கொள்ளுதல் நல்லது. இல்லையெனில், மேலை நாடுகள் மாதிரி செய்யலாம். ஒவ்வொரு தலைவருக்கும் அரை மணிநேரம் அல்லது ஒரு மணிநேரம் பேசுவதற்கு ஒதுக்கலாம். இந்த இடத்தில் இவர் பேசவிருக்கிறார் என்று அறிவித்தால், யார் பேசுவது ஏற்புடையதோ அவர்களுக்கு வாக்கு செலுத்துவர். இந்த முறையைக் கொண்டு வருவதுதான் நல்லது.
விஜய் வருவதனால்தான் கரூரில் கூட்டம்; அப்படியென்றால், அவர் வருவதுதான் முக்கிய காரணம். அப்படியிருக்கையில், அதற்கு பொறுப்பேற்று வருந்துகிறேன் என்று கூறினாலே முற்றுப் பெற்றுவிடும்.
அதை விட்டுவிட்டு, பழியை அரசு ஏற்க வேண்டும், காவல்துறை ஏற்க வேண்டும், எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறும்போதுதான் சிக்கல் உண்டாகிறது. இருதரப்புக்கும் பொறுப்பு உள்ளது. அதனைத் தவறவிட்டதால் பல உயிர்களை இழந்துவிட்டோம்.
தகாத ஒரு நிகழ்வு நிகழ்ந்துவிட்டது. இனி வரும் காலங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இருப்பதுதான் சரி.
அதை விட்டுவிட்டு மாறிமாறி ஒருவருக்கொருவர் பழியைப் போட்டுக்கொண்டு இவர்தான் காரணம், அவர்தான் காரணம் என்று கூறுவதைப் பார்க்கும்போது நமக்குதான் வேதனையாக இருக்கிறது.
இது உயிரிழப்புகளைவிட கொடுமையாக இருக்கிறது. அவரை எப்படியேனும் கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சிக்கிறது; அதனால் பேசி வருகின்றனர்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |