நடிகர் சூர்யாவை உதைக்க சொன்னவரை உதைத்தால் நான் பணம் தருகிறேன்! சீமான் அதிரடி
சூர்யாவை அடிக்க சொன்னவரை அடித்தால் நான் பணம் தருகிறேன் என சீமான் கூறியுள்ளார்.
வ.உ.சி-யின் 85-வது நினைவு தினத்தையொட்டி, அவரது உருவப் படத்திற்கு சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெய்பீம் படம் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதத்தில் உள்ள உண்மைத் தன்மையை ஏற்று கொள்ளாமல் இருக்க முடியாது. உலகத்திற்கே தெரியும் ‘அக்னி கலசம்’ வன்னியர் சங்கத்தின் முத்திரை என்பது. அதை ஏன், ஜெய்பீம் படத்தில் வைக்க வேண்டும் படத்தில் அக்னி சட்டி காட்சியை தவிர்த்திருக்கலாம்.
இந்தப் பிரச்சனை வெளியானவுடனே அந்த புகைப்படம் நீக்கப்பட்டு லட்சுமி உள்ள காலெண்டரை வைத்துவிட்டனர். இதை தொடக்கத்திலேயே செய்திருக்கலாம் என்பதுதான் எனது கருத்து.
ஒரு சமுதாய மக்களின் வலியை வெளிப்படுத்தும்போது மற்ற சமுதாயத்திற்கு வேதனையை ஏற்படுத்திவிடக்கூடாது என்பது என் கருத்து.
சூர்யாவை மட்டுமல்ல அவரது குடும்பத்தினரையே எனக்கு நன்று தெரியும். சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வுகாண நினைப்பார்களே தவிர, புதியதாக ஒரு பிரச்சனையை வளர்க்க வேண்டும் என எப்பொழுதுமே நினைக்க மாட்டார்கள்.
அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என்று இருப்பார்கள். தேவையில்லாமல் அவர்களை மிதியுங்கள் உதையுங்கள் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. சூர்யாவை உதைக்கச் சொன்னவரை வேண்டுமானால் உதைங்க, நான் காசு தருகிறேன் என கூறியுள்ளார்.