தமிழர்களையும், ஈழ போராட்டத்தையும் இழிவாகச் சித்தரித்திருக்கும் ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரை தடை செய்! செய்யாவிட்டால்.. சீமான் விடுத்துள்ள எச்சரிக்கை
தமிழர்களுக்கெதிரான, ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரைத் தடைசெய்யச் சட்டரீதியாகவும், சனநாயகப்பூர்வமாகவும் களமிறங்கி அதனைத் தடுத்து நிறுத்துவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள், தமிழர்களைச் சீண்டும் நோக்கில் திட்டமிட்ட வன்மத்தோடு எடுக்கப்பட்டுள்ள, ‘தி பேமிலி மேன் 2’ எனும் இணையத்தொடரில் வீரம்செறிந்த ஈழ விடுதலைப்போராட்டத்தை மலினப்படுத்தி, கொச்சைப்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருக்கிற சித்தரிப்புகளும், காட்சியமைப்புகளும் குறித்துக் கேள்வியுற்றுப் பேரதிர்ச்சியடைந்தேன்.
தமிழர்களின் தாயகத்தை மொத்தமாய் ஆக்கிரமித்து, ஆதிக்கம் செய்து, அழித்தொழித்த அரசப்பயங்கரவாதிகளான சிங்கள ஆட்சியாளர்களின் குரல் போல ஒலித்து, தமிழர்களை மிகக்கீழ்த்தரமாகக் காட்டி, போர்வெறிக் கொண்ட பயங்கரவாதிகளாவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்க முற்படும் வகையில் இணையத்தொடரை உருவாக்கியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஈழத்தில் நடைபெற்ற தமிழர் இனஅழிப்புப்போரை, இந்தியாவில் வாழும் பல்வேறு மொழிவழி தேசிய இனங்களிடையேயும், அவர்களின் பிரதிநிதிகளிடையேயும் எடுத்துரைத்து அநீதிக்கெதிரான களத்தில் எங்களோடு மற்றமொழிவழி தேசிய இன மக்களையும் இணைத்து, கரம்கோர்த்து நிற்க, எங்களுக்கான ஆதரவுத்தளத்தை மாநிலங்களைக் கடந்து இந்தியாவெங்கும் உருவாக்கும் முன்முயற்சியில் இறங்கியிருக்கிற வேளையில் அதனை முற்றாகத் தகர்த்து, ஈழ விடுதலைப்போராட்டம் குறித்து மிகத் தவறான புரிதலை மற்ற இனங்களிடையே உருவாக்கி, எம்மினத்தின் விடுதலைப்போரை வன்முறை வெறியாட்டமாகவும், பயங்கரவாதப்போராகவும் காட்ட முனைகிற செயல்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இத்தகைய இணையத்தொடருக்கு தமிழக அரசு தனது கண்டனத்தைப் பதிவுசெய்து, அதற்கு எதிர்ப்பு நிலையினை எடுத்து, தடைசெய்யக் கோரியும்கூட அதனை ஏற்காத மத்தியில் ஆளும் பாஜக அரசின் நயவஞ்சகச்செயல் அப்பட்டமான தமிழர் விரோதப்போக்காகும்.
தமிழர்களுக்கெதிரான, ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரைத் தடைசெய்யச் சட்டரீதியாகவும், சனநாயகப்பூர்வமாகவும் களமிறங்கி, அதனைத் தடுத்து நிறுத்துவோம்!https://t.co/el9W2Y0FSt pic.twitter.com/AlkuwHt8cy
— சீமான் (@SeemanOfficial) June 5, 2021
ஆகவே, தமிழர்களையும், தமிழர்களின் வீரம்செறிந்த ஈழ விடுதலைப் போராட்டத்தையும் மிக மிக இழிவாகச் சித்தரித்து அதனைத் தவறாகக் காட்சிப்படுத்தியிருக்கும், ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரை முற்றாகத் தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யாவிட்டால், சட்டரீதியாகவும், சனநாயகப்பூர்வமாகவும் அதற்கெதிராகக் களமிறங்கித் தடுத்து நிறுத்துவோமென சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.