தமிழர்களை கொச்சைப்படுத்தும் ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரை ரத்து செய்ய வேண்டும்! இல்லாவிட்டால் .. சீமான் கடும் எச்சரிக்கை
தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை ஒளிபரப்புவதை ரத்து செய்யாவிட்டால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என நாம் தமிழர் கட்சியின் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் நடிகை சமந்தா, பிரியாமணி, மனோஜ் பாஜ்பாயி நடித்துள்ள தி பேமிலி மேன் 2 இணையத்தொடரின் டிரைலர் வெளியானது.
இதில், சமந்தா ஈழப்பெண் போராளியாகச் சித்தரிக்கப்பட்டு, சமந்தாவின் போராளி குழுக்கும் பாகிஸ்தானின் ISI அமைப்பிற்கும் சம்பந்தமிருக்கிறது என்ற வசனமும் டிரைலரில் இடம்பெற்றது பெரும் சரச்சையை ஏற்படுத்தியது.
தமிழர்கள் பலர் தி பேமிலி மேன் 2 இணைத் தொடருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அவர்களின் அமேசான் பிரைம் சந்தாதாரரிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.
இந்நிலையில், தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை ஒளிபரப்புவதை ரத்து செய்ய வேண்டும் என சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமேசான் பிரைம் இணையத்தளத்தில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிற, ‘தி பேமிலி மேன் 2’ எனும் இணையத்தொடரின் முன்னோட்டமும், அதில் இடம்பெற்றிருக்கிற காட்சியமைப்புகளும் பேரதிர்ச்சி தருகின்றன.
விடுதலைப்புலிகளைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து, தமிழர்களை வன்முறையாளர்களாகக் காட்ட முற்படும் இத்தொடர் முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடும், தமிழர்கள் மீதான வன்மத்தோடும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
ஏற்கனவே, மிகத்தவறாக எடுக்கப்பட்ட இனம், மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்களுக்கு எழுந்த எதிர்ப்பினை உணர்ந்து திரையிடப்படாது, அவை ரத்து செய்யப்பட்டது போல, தி பேமிலி மேன் 2 எனும் இணையத்தொடரின் ஒளிபரப்பையும் ரத்து செய்ய வேண்டும்.
தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை ஒளிபரப்புவதை ரத்து செய்யாவிட்டால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்! – சீமான் எச்சரிக்கை https://t.co/UDEU0P8Mak
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) May 21, 2021
அதனைச் செய்ய மறுத்து, தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை நாடெங்கும் ஒளிபரப்பித் தமிழர்கள் குறித்துத் தவறான கருத்துருவாக்கத்தைச் செய்ய முனைந்தால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.