இந்திய அணிக்கு இப்படி வீரர்கள் கிடைக்க இந்த ஒருவரே காரணம்! சக்லைன் முஸ்தாக் சொன்ன வித்தியாசமான காரணம்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சக்லைன் முஸ்தான் இந்திய அணி இப்போது சிறப்பாக இருப்பதற்கு முக்கிய காரணம் சேவாக் என்று கூறியுள்ளார்.
உலக கிரிக்கெட் அரங்கையே திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்திய அணி வளர்ந்து வருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு சர்வதேச போட்டிகளில் இந்தியா விளையாடவுள்ளது.
அதாவது உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டி ஜுன் மாதம் நடைபெறுகிறது. அதே காலக்கட்டத்தில், இலங்கை அணியுடனான தொடரிலும் இந்தியா விளையாடவுள்ளது.
இலங்கை தொடருக்கு இளம் வீரர்களும், உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு அனுபவம் வாய்ந்த வீரர்களும் விளையாடவுள்ளனர். இதனால் இந்திய அணியின் இந்த அணுகுமுறையை பல முன்னணி வீரர்களும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சக்லை முஸ்தாக் இதற்கு எல்லாம் முக்கிய காரணம் சேவாக் தான் என்று கூறியுள்ளார்.
அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சேவாக் தன்னுடைய அதிரடி ஆட்டத்தினால் உலக கிரிக்கெட்டில் ஏற்படுத்திய தாக்கத்தை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
தற்போது இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும் அனைத்து வீரர்களும் அவரின் அதிரடி பாணியால் பயனடைந்துள்ளனர். இந்த உலகத்திற்கு காட்டிய அவருடைய அதிரடியான பேட்டிங்தான் இந்திய கிரிக்கெட்டின் மனநிலையையும், அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்களின் மனநிலையையும் மாற்றியுள்ளது.
கிரிக்கெட் ஜாம்பவானான சர் விவியன் ரிச்சர்ட்ஸின் அணுகுமுறையும், சேவாக்கின் அணுகுமுறையும் ஒரே மாதிரியாக இருக்கும்.
ரோஹித் சர்மாவின் ரெக்கார்டுகள் சேவாக்கின் ரெக்கார்டுகளை விட நன்றாக இருக்கலாம், ஆனால் ரோஹித்தின் அதிரடி ஆட்டத்திற்கு காரணமாக சேவாக் தான் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.