இரு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டாலும் சுய தனிமைப்படுத்தல் கட்டாயம்: பிரித்தானியா அரசு முடிவு
பிரித்தானியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்னரும் கொரோனா பாதிப்பு மிகுந்த பகுதியில் சென்று வந்தவர்கள் கட்டாயம் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் ஜூன் 21 முதல் பிரித்தானியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கப்படும் என்றே தெரிய வந்துள்ளது.
ஆனால் கொரோனா பாதித்த நபருடன் தொடர்பு கொண்டவர்கள், இரு டோஸ் தடுப்பூசி எடுத்திருந்தாலும் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
கொரோனா பரவலை முற்றிலுமாக ஒழிக்கும் திட்டத்தின் ஒருபகுதியாகவே இதை பார்க்கப்படுகிறது. இந்த 10 நாட்கள் சுய தனிமைப்படுத்துதல் திட்டம் தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அடுத்த வாரம் அறிக்கை வெளியாகும் என்றே தெரிய வந்துள்ளது.
அடுத்த வாரம் வெளியிடப்படும் அறிக்கையில், மாஸ்க் அணிவதில் விலக்கு ஏற்படுத்துவது தொடர்பிலும், சமூக இடைவெளியின் தேவை குறித்தும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
ஜூன் 21ம் திகதிக்கு பின்னரும், இரு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின்னரும் 10 நாட்கள் சுய தனிமைப்படுத்துதல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டால், கண்டிப்பாக பிரித்தானிய மக்களில் அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.
இந்த 10 நாள் தனிமைப்படுத்துதலுக்கு பயந்து பிரித்தானிய மக்கள் கூட்டங்களில் கலந்து கொள்வதில் இருந்து கண்டிப்பாக விலகி இருப்பார்கள்.
ஆனால் அமெரிக்காவில், இரு டோஸ் எடுத்துக் கொண்ட பின்னரும், கொரோனா அறிகுறிகள் இருந்தால் மட்டுமே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.