மாஸ்க் அணியாமல் மதுபானம் வாங்க வந்தவரிடம் கொரோனா விதிகளை பின்பற்றுமாறு கூறிய கடை ஊழியருக்கு நேர்ந்த பரிதாபம்
ஜேர்மனியில் மாஸ்க் அணியாமல் மதுபானம் வாங்க வந்த ஒருவருக்கு மதுபானம் வழங்க மறுத்திருக்கிறார் கடை ஊழியர் ஒருவர். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மதுபானம் வாங்க வந்த 49 வயது நபரோ கொரோனா விதிகளுக்கெதிரான கொள்கைகள் கொண்டவர். அந்த கடை ஊழியர் தனக்கு மதுபானம் வழங்க மறுக்கவே, கோபத்துடன் அங்கிருந்து சென்ற அந்த நபர் மீண்டும் கடைக்கு மாஸ்க் அணிந்து திரும்பியிருக்கிறார். ஆனால், இம்முறை அவர் கையில் ஒரு கைத்துப்பாக்கி இருந்திருக்கிறது.
தனக்கு மதுபானம் விற்க மறுத்த கடை ஊழியரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து ஓடியிருக்கிறார் அவர்.
தலையில் குண்டு பாய்ந்த அந்த கடை ஊழியர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
20 வயதான அந்த கடை ஊழியர், ஒரு மாணவர் ஆவார். தன் பணத்தேவைகளுக்காக பெட்ரோல் நிலையம் ஒன்றிலிருந்த கடையில் பணிபுரிந்து வந்திருக்கிறார் அவர்.
பொலிசார் துப்பாக்கியால் சுட்ட நபரைத் தேடிவர, மறுநாள் தானே பொலிஸ் நிலையம் சென்று, தான் கோபத்தில் அந்த இளைஞரை சுட்டுவிட்டதாகக் கூறி சரணடைந்திருக்கிறார் அவர்.
தான் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான கொள்கைகள் கொண்டவன் என்று பொலிசாரிடம் கூறிய அந்த நபர், கொரோனா காலகட்டத்தால் கடும் மன அழுத்தத்திற்குள்ளாகியிருந்த அவர், தன் நிலைமையை வெளிப்படுத்த இதுவே சிறந்த வழி என இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.