கடும் விளைவுகள் ஏற்படும்... எலோன் மஸ்கை எச்சரித்த ஜனாதிபதி ட்ரம்ப்
ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு நிதி அளிக்கத் தொடங்கினால், மிகக் கடுமையான விளைவுகளை எலோன் மஸ்க் சந்திக்க நேரிடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
மோசமான விளைவுகளை
ஜனாதிபதி ட்ரம்பின் நிதி தொடர்பான பிரேரணைக்கு எதிராக எலோன் மஸ்க் களமிறங்கியதை அடுத்து இருவருக்கும் இடையேயான உறவு முறிந்தது. மட்டுமின்றி, சமூக ஊடகத்தில் இருவரும் கடுமையான வார்த்தைகளால் மோதலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு எலோன் மஸ்க் நிதி அளிக்கத் தொடங்கினால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், மிக மோசமான விளைவுகளை எலோன் மஸ்க் எதிர்கொள்ள நேரிடும் என்றார்.
சுமார் 330 பில்லியன் டொலர் சொத்து மதிப்பைக் கொண்ட எலோன் மஸ்க், ட்ரம்பின் தேர்தல் பரப்புரைக்கு என சுமார் 250 மில்லியன் டொலர் செலவிட்டிருந்தார். தற்போது இருவருக்கும் இடையேயான உறவு முறிந்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், முடிவுக்கு வந்துள்ளதாக நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
கடனில் தள்ளப்படும்
மேலும், தமது முதல் ஆட்சி காலத்திலேயே மஸ்க்கின் வாழ்க்கையை காப்பாற்றியதாகவும், பலமுறை அவருக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தந்ததாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, ஒரு நாட்டின் ஜனாதிபதி என்றும் பாராமல் எலோன் மஸ்க் மரியாதை இன்றி நடந்துகொண்டதாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். ட்ரம்ப் முன்வைக்கும் புதிய நிதி மசோதாவால் அமெரிக்கா 3.8 டிரில்லியன் டொலர் கடனில் தள்ளப்படும்.
ஏற்கனவே 36 டிரில்லியன் டொலர் கடனில் அமெரிக்கா மூழ்கியுள்ளது. இதன் காரணமாகவே எலோன் மஸ்க் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |