மருத்துவமனை படுக்கையில் சீரழித்து கொலை செய்யப்பட்ட பிரித்தானிய பெண்மணி
பக்கவாதம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்மணி ஒருவர், சீரழிக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை துவங்கியுள்ளது.
கடந்த 2018 நவம்பர் மாதம் 75 வயதான வலேரி க்னேல் என்பவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், நாற்காலியில் இருந்து விழுந்து கால் முறிந்து பிளாக்பூல் விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் வைத்து நவம்பர் 16ம் திகதி அவர் மரணமடைந்த நிலையில், அவரது மரணத்திற்கான காரணம் மருத்துவ சம்பந்தமில்லாத உள் காயம் என்று உடற்கூராய்வில் தெரிய வந்தது.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பில் லங்காஷயர் பொலிசார் விசாரணையைத் தொடங்கினர். இந்த நிலையில், கொலை, துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்கொடுமை உள்பட சந்தேகத்தின் பேரில் ஆண் மருத்துவமனை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து அந்த ஊழியர் பிளாக்பூல் மருத்துவமனை நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், கைதான நபர் தொடர்பில் ஏற்கனவே பல குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளதை விசாரணை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்த வழக்கில் பொலிஸ் விசாரணை முழுமையாக முடியாத நிலையில், நீதிமன்ற விசாரணையானது சில மாதங்கள் தாமதமாகலாம் என தெரிய வந்துள்ளது.