மீண்டும் உள்துறைச் செயலராக ஷபானா மஹ்மூத்... மக்கள் கோரிக்கை
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆட்சியில் உள்துறைச் செயலராக பொறுப்பு வகித்த ஷபானா மஹ்மூதே, புதிய பிரதமரான ஆன்டி பர்னாம் அமைச்சரவையிலும் உள்துறைச் செயலராக நீடிக்கிறார்.
ஷபானா வெளியிட்டுள்ள செய்தி

ஆன்டி பர்னாம் அமைச்சரவையிலும் தான் உள்துறைச் செயலராக நீடிப்பது உறுதியானதைத் தொடர்ந்து சமூக ஊடகம் ஒன்றில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள ஷபானா, ஆன்டி பர்னாம் அமைச்சரவையிலும் உள்துறைச் செயலராக நீடிப்பதை தான் கௌரவமாகக் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், என் கருத்து ஒருதலைப்பட்சமாக இருக்கலாம், ஆனால் இந்தத் துறையிலேயே இதுதான் சிறந்த வேலை என்றும் குறிப்பிட்டுள்ள ஷபானா, நமது தெருக்களைப் பாதுகாப்பானவையாகவும், நமது புலம்பெயர்தல் அமைப்பை அனைவருக்கும் நியாயமானதாகவும் மாற்றுவதற்கான பெரும் சீர்திருத்தப் பணியை நாம் தொடங்கியுள்ளோம். இப்போது அந்த வேலையை நாம் முடிப்போம் என்றும் கூறியுள்ளார்.
ஆன்டி பர்னாம் அமைச்சரவையில் ஷபானா மஹ்மூதுக்கு சேன்ஸலர் பதவி கொடுக்கப்படலாம் என பிரித்தானிய ஊடகங்கள் எழுதிவந்தன.
அத்துடன், எரிசக்திச் செயலரான எட் மிலிபேண்ட், முன்னாள் சுகாதாரச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங், வெளியுறவுச் செயலரான யெவட் கூப்பர் என பலரது பெயர்கள் அடிபட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக, பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த ஜான் ஹீலியை சேன்ஸலராக்கியுள்ளார் ஆன்டி பர்னாம்.
இதற்கிடையில், ஆன்டி பர்னாம் அமைச்சரவையிலும் தான் உள்துறைச் செயலராக நீடிப்பது குறித்து ஷபானா வெளியிட்டுள்ள செய்தியின் கீழ் கருத்து தெரிவித்துள்ளவர்கள், ஷபானா, நீங்கள் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் விடயத்தில் எடுத்த நடவடிக்கைகள் நியாயமானவை.
ஆனால், நீங்கள் சட்டப்படி புலம்பெயர்ந்தோரை அங்கீகரிக்கவில்லை. மீண்டும் உள்துறைச் செயலராக பொறுப்பேற்றுள்ள நீங்கள், அவர்கள் பிரித்தானியாவுக்கு அளித்துவரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்னும் ரீதியில் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |