அவுட் கொடுக்காத நடுவர்! கடும் கோபத்தில் ஸ்டம்பை உதைத்து பிடுங்கி வீசி எறிந்த ஷகிப் அல் ஹசன்: கமெராவில் பதிவான காட்சி
வங்கதேசத்தில் நடைபெற்று வரும் உள்ளூர் டி20 தொடரில் ஷகிப் அல் ஹசன் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் தலை சிறந்த கிரிக்கெட் ஆல் ரவுண்டர்களில், வங்கதேசத்தைச் சேர்ந்த ஷகிப் அல் ஹசனும் ஒருவர். தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் வங்கதேச அணிக்கு பல முறை வெற்றியை தேடித் தந்துள்ளார்.
அதுமட்டுமின்றி, வெளிநாடுகளில் நடக்கும் பிரீமியர் லீக் தொடர்களில், இவரை எடுக்க அணிகள் போட்டு போடும். அந்தளவிற்கு சிறந்த ஆல் ரவுண்டரான ஷகிப் அல் ஹசன், சமீபத்தில் தான் இரண்டு ஆண்டு தடைக்கு பின் மீண்டும் அணிக்கு திரும்பினார்.
அதாவது, ஷகிப் அல் ஹசன் 2 வருடங்களுக்கு நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டக்காரர் ஒருவர் அவரை அணுகியுள்ளார். ஆனால் இந்த விவகாரம் குறித்து ஐசிசியின் ஊழல் தடுப்பு நிறுவனத்திடம் ஷகிப் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
இதனால் அவருக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. தடை காலம் முடிந்து இப்போது தான் ஷகிப் ஐபிஎல் தொடர், வங்கதேச அணிக்கு விளையாடி வருகிறார்.
இந்நிலையில், அவர் தற்போது வங்கதேசத்தில் நடைபெறும் உள்ளூர் தொடரான Dhaka Premier Division Twenty20 Cricket League-ல் மோஹம்மெதான் ஸ்போர்ட்டிங் கிளப் அணிக்கு ஷகிப் அல் ஹசன் கேப்டனாக உள்ளார்.
இதையடுத்து இன்று மோஹம்மெதான் ஸ்போர்ட்டிங் கிளப் அணிக்கும், அபஹானி லிமிட்டட் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. அதன் படி முதலில் ஆடிய, மோஹம்மெதான் ஸ்போர்ட்டிங் கிளப் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து, அபஹானி அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, வங்கதேச அணியின் தனது சக வீரரான முஷ்பிகுர் ரஹீமுக்கு அவர் பந்து வீசினார். நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார்.
இதனால், நிதானத்தை இழந்த ஷகிப் அங்கேயே ஸ்டெம்ப்புகளை நோக்கி ஓங்கி உதைவிட பைல்ஸ்கள் தெறித்து சென்று விழுந்தன. அதோடு நிற்காமல், அம்பயருடன் கடும் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டார்.
அதன் பிறகு, அபஹானி அணி 5.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 31 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, திடீரென மழை குறுக்கிட, நடுவர் ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தார்.
உடனே, பீல்டிங் செய்த இடத்தில் இருந்து வேக வேகமாக வந்த ஷகிப் அல்ஹசன், நடுவர் அருகில் இருந்த மூன்று ஸ்டெம்ப்புகளையும் கையோடு பிடிங்கி, தரையில் வேகமாக தூக்கி எறிந்தார். இந்த வீடியோ காட்சி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.