இளவரசி டயானாவை கொல்ல சதித் திட்டம்: சார்லசை விசாரித்த பொலிஸ் அதிகாரி பகிர்ந்த தகவல்
இளவரசி டயானாவை கொல்ல சார்லஸ் திட்டமிட்டதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, அவரை பொலிசார் விசாரணை செய்ததாக முன்னாள் ஸ்காட்லாந்து யார்டின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கார் விபத்தில் தாம் கொல்லப்படலாம் என டயானா எழுதிய ஒரு குறிப்பு சிக்கியதை அடுத்தே பொலிசார் விசாரணையை முன்னெடுத்ததாக முன்னாள் ஸ்காட்லாந்து யார்டின் தலைவர் Lord Stevens தெரிவித்துள்ளார்.
தாம் கார் விபத்தில் கொல்லப்பட்டால் இளவரசர் சார்லஸ் Tiggy Legge-Bourke என்பவரை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் டயானா அந்த குறிப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆனால், இளவரசர் சார்லசை ஒரு சாட்சியாகவே கருதி விசாரித்ததாகவும், கண்டிப்பாக குற்றவாளி என்ற கோணத்தில் அணுகவில்லை எனவும் Lord Stevens தெரிவித்துள்ளார்.
மேலும், டயானா அவ்வாறான ஒரு குறிப்பை எழுதியதன் நோக்கம் தமக்கு தெரியவில்லை என விசாரணையின் போது சார்லஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் ஊடகவியலாளர் மார்ட்டின் பஷீர் மீதும் விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக Lord Stevens தெரிவித்துள்ளார்.
பஷீர் முன்னெடுத்த நேர்காணலின் தொடர்ச்சியாகவே, இளவரசி டயானா தாம் கொல்லப்பட வாய்ப்பிருப்பதாக நம்பியிருக்கலாம் எனவும், இதன் ஒருபகுதியாகவே டிசம்பர் 6ம் திகதி 2005ல் இளவரசர் சார்லஸ் விசாரிக்கப்பாட்டார் என Lord Stevens விளக்கமளித்துள்ளார்.
இளவரசி டயானா தனது காதலர் டோடி அல் ஃபயீத் மற்றும் அவர்களது சாரதி ஹென்றி பால் ஆகியோருடன் பாரிஸ் சுரங்கப்பாதையில் விபத்தில் சிக்கி மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.