இலங்கையுடனான தோல்விக்கு என்ன காரணம்? அவர்களிடம் என்ன பேசினேன்? கேப்டன் ஷிகார் தவான் விளக்கம்
இந்திய அணியின் தலைவரான ஷிகார் தவான், இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டி தோல்வி குறித்து பேசியுள்ளார்.
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி வெறும் 81 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க, அடுத்து ஆடிய இலங்கை அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன், ஷிகார் தவான் கூறுகையில், இது எங்களுக்கு மிக மோசமான நிலை. பல சீனியர் வீரர்கள் இல்லையென்றாலும் ஒரு அணியாக இந்த சூழ்நிலையை கடந்து செல்ல வேண்டும் என நாங்கள் முடிவு எடுத்திருந்தோம்.
எங்கள் வீரர்களை நினைத்து பெருமை கொள்கிறேன். கடந்த இரண்டு போட்டிகளிலும் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். வெற்றி பெறுவதற்கே நாங்கள் போராடினோம்.
ஆனால் இது போன்ற போட்டிகளில் இருந்து அதிகமான விசயங்களை கற்று கொள்ள முடியும். இலங்கை அணி மிக சிறப்பாக பந்துவீசியது. அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து கொண்டே இருந்தால், நெருக்கடி தானாகவே நம்மை சூழ்ந்து கொள்ளும்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் 80 ஓட்டங்களுக்கு மேல் எடுத்ததே மகிழ்ச்சியை கொடுத்தது. இரு அணிகளுமே மிக சிறப்பாக விளையாடியது என்று கூறினார்.
மேலும், இலங்கை அணி வீரர்களிடம் என்ன பேசினீர்கள் என்று கேட்ட போது, இலங்கை அணி வீரர்கள் எனது அனுபவத்தை அறிந்து கொள்ள விரும்பினார்.
எனவே நான் எனது அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
அவர்களுக்கு நான் பேசியது பிடித்திருக்கும் என நம்புகிறேன். இலங்கை அணிக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.