இலங்கை அணியை வீழ்த்த காரணமாக இருந்த இந்திய அணி தலைவர் ஷிகர் தவான்! ஒரே போட்டியில் செய்த 3 சாதனைகள்
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 86 ரன்கள் குவித்ததன் மூலம் புதிய மைல்கல்லை இந்திய அணி தலைவர் ஷிகர் தவான் எட்டியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக நேற்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணித்தலைவர் தவான் 95 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
இதில் ஒருநாள் போட்டிகளில் 6,000 ரன்களை அவர் கடந்தார். இதன்மூலம் குறைந்த இன்னிங்ஸில் 6000 ஒருநாள் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய 4வது வீரர் ஆனார் ஷிகர் தவான்.
மேலும் இந்திய அணியைப் பொறுத்தவரையில் விராட் கோஹ்லிக்குப் பிறகு குறைந்த இன்னிங்சில் 6000 ரன்கள் மைல்கல்லை எட்டியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அதே போல் ஒருநாள் சர்வதேச போட்டி கேப்டன்சி அறிமுகப் போட்டியில் அரைசதம் எடுத்த 6வது வீரர் ஆனார் ஷிகர் தவான்.
இவருக்கு முன்னால், அஜித் வடேகர், ரவிசாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர், அஜய் ஜடேஜா, எம்.எஸ். டோனி ஆகியோர் இதே சாதனையைப் புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.