அமெரிக்காவில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட சரக்கு கப்பல்: அதில் பதுங்கியிருந்த உயிரினம்
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் அருகே நங்கூரமிட்டிருந்த ஒரு சரக்குக் கப்பலில், ஆசிய வண்டுகளால் பாதிக்கப்பட்ட மரக்கட்டைகள் கண்டறிந்ததைத் தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது.
குறித்த வண்டுகளால் கால் நூற்றாண்டுகளாக அமெரிக்காவில் மரங்கள் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜூலை 17ம் திகதியே அதிகாரிகள் தரப்பு பான் ஜாஸ்மின் என்ற அந்த சரக்கு கப்பலில் காணப்பட்ட மரக்கட்டைகளில் ஆசிய வண்டுகள் மற்றும் ஒருவகை எறும்புகளையும் கண்டறிந்தனர்.
வண்டுகள் மரங்களை மொத்தமாக சேதப்படுத்தும் என தெரியவந்த நிலையில், எறும்புகள் விளை நிலங்களையும் பயிர்களையும் சேதப்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்து மரக்கட்டைகள் இறக்கப்பட்டால், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்றே அதிகாரிகள் தரப்பு அச்சம் தெரிவித்துள்ளனர்.
590 அடி நீளம் கொண்ட அந்த கப்பலானது நியூ ஆர்லியன்ஸிலிருந்து ஒரு மைல் வெளியே மிசிசிப்பி ஆற்றில் நிறுத்தப்பட்டிருந்தது.
குறித்த கப்பலானது இதற்கு முன்னர் இந்தியாவில் ஒரு துறைமுகத்தில் இருந்து வெளியேறி, மெக்ஸிகோவின் வெராக்ரூஸில் அலுமினியத்தை இறக்கியுள்ளது.
அலுமினியத்தை பாதுகாப்பாக கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட மரக்கட்டைகள் ஏன் மெக்ஸிகோவில் இறக்கப்படவில்லை என்ற கேள்வியே, அமெரிக்க அதிகாரிகளை சோதனைக்கு உட்பட வைத்துள்ளது.
நியூயார்க் நகரில் 1996ல் முதன் முறையாக ஆசிய வண்டுகள் கண்டறியப்பட்டு, அடுத்த 2 ஆண்டுகளில் சுமார் 7,000 மரங்கள் சேதமடைந்ததுடன், வண்டுகளை கட்டுப்படுத்த மொத்தம் 530 மில்லியன் டொலர் அளவுக்கு செலவானதாகவும் தெரிய வந்துள்ளது.