லண்டன் பொலிஸ் நிலையத்தின் மீது காரை மோதி தீவைத்த நபர்: வித்தியாசமான தண்டனை வழங்கியுள்ள நீதிபதி
லண்டன் பொலிஸ் நிலையம் ஒன்றின்மீது வேண்டுமென்றே காரை மோதியதுடன், பொலிஸ் நிலையம் மீதும் சாலையிலும் பெட்ரோலை ஊற்றி தீவைத்த ஒருவருக்கு வித்தியாசமான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 11ஆம் திகதி, வேகமாக காரில் வந்த ஒரு நபர் எட்மண்டன் பொலிஸ் நிலையத்தின் மீது காரை மோதிவிட்டு, பொலிஸ் நிலையம் மீதும் சாலையிலும் பெட்ரோலை ஊற்றி தீவைத்தார்.
சாலையில் வந்து கொண்டிருந்த வாகன ஓட்டிகள் இந்த காட்சியால் அதிர்ந்து ஆங்காங்கு தங்கள் வாகனங்களை நிறுத்த, சிலர் அந்த நபரைத் தடுக்க முயன்றார்கள்.
அதற்குள் விரைந்து வந்த பொலிசார் அந்த நபரைக் கோழியை அமுக்குவது போல அமுக்கிப் பிடித்ததுடன், அருகிலிருந்த வாகனங்கள் மற்றும் வீடுகளிலிருந்த மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினார்கள்.
விசாரணையில், அந்த நபரின் பெயர் Adam Pawlowski (46) என்பதும், என்பீல்ட் என்ற இடத்தைச் சேர்ந்த அவர், தனது கார் திருட்டுப்போனதைத் தொடர்ந்து பொலிசாரிடம் புகாரளித்தும், கடைசி வரை அவர்கள் காரை கண்டுபிடித்துத் தராததால் அவர்கள் மீது கோபத்தில் இப்படி செய்தது தெரியவந்தது.
அவர் பொதுமக்களுக்கு அதிர்ச்சியையும், அவநம்பிக்கையையும் பயத்தையும் ஏற்படுத்தியததற்காக அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், தீர்ப்பளித்த நீதிபதியான Barbara Mensah, அவருக்கு வித்தியாசமான தண்டனை வழங்கினார். ஆம், கால வரையறையின்றி மன நோய் மருத்துவமனை ஒன்றில் Adamஐ அனுமதிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.