இங்கிலாந்தில் பிரசவத்தின்போது உயிரிழக்கும் பெண்கள் எண்ணிக்கை: திடுக் புள்ளிவிவரங்கள்
இங்கிலாந்தில் பிரசவத்தின்போது உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை 20 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக, மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழக்கும் கர்ப்பிணிகள் எண்ணிக்கை
2009 - 2011 காலகட்டத்தில், இங்கிலாந்தில் பிரசவத்தின்போது உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க அரசு இலக்கு நியமித்தது.

ஆனால், அந்தக் காலகட்டத்தை ஒப்பிடும்போது, பிரசவத்தின்போது உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை, இப்போது 20 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மேற்கொண்ட விசாரணை ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
திடுக் புள்ளிவிவரங்கள்
கடந்த ஆண்டு ஜூன் மாதம், வெஸ் ஸ்ட்ரீட்டிங் பிரித்தானியாவின் சுகாதாரச் செயலராக இருந்தபோது, அரசு தாய் சேய் நல மருத்துவமனைகள் குறித்து விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான வேலரி ஆமோஸ் (Valerie Amos) என்பவர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அந்த விசாரணையின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
விசாரணையின் முடிவுகள், பிரித்தானியாவில், பிரசவத்தின்போது அல்லது பிரசவத்தைத் தொடர்ந்து உயிரிழக்கும் பெண்கள் எண்ணிக்கை 100,000க்கு 12.8 ஆக உள்ளதாக தெரிவித்துள்ளன.

அத்துடன், 2009 - 2011 காலகட்டத்தை ஒப்பிடும்போது, இங்கிலாந்தில் பிரசவத்தின்போது உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை, இப்போது 20 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக விசாரணையின் முடிவுகள் தெரிவித்துள்ளன.
பிற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது, பிரசவத்தின்போது உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை ஐரோப்பாவிலேயே பிரித்தானியாவில்தான் அதிகமாக உள்ளது.
அதேபோல, பிரசவத்தின்போது பெண்கள் பல்வேறு உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு ஆளாவதும் அதிகமாகியுள்ளது.
பிரசவத்தின்போது பிள்ளைகளுக்கும் தாய்மார்களுக்கும் ஏற்படும் பிரச்சினைகளை எழுதினால் அது மனக்கலக்கத்தை ஏற்படுத்தும் என்னும் அச்சம் ஏற்படுகிறது.
காரணம் என்ன?
இப்படி பிரசவத்தின்போது பெண்கள் உயிரிழப்பதற்கும், பாதிக்கப்படுவதற்கும் காரணம் என்ன என ஆராய்ந்தால், பிரசவம் பார்க்கும் தாதியர் எண்ணிக்கை குறைவாக உள்ளது முதல், இனவெறுப்பு வரையிலான பலவேறு காரணங்கள் அரசு மருத்துவமனைகளில் நிலவுவது தெரியவருகிறது.
இன்னொரு பக்கம், சாதாரண பிரசவத்தை விட சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பது அதிகரித்துள்ளது.
அதிலும், வெள்ளையின மற்றும் பணக்காரப் பெண்களை ஒப்பிடும்போது, கருப்பினப் பெண்கள் மற்றும் ஏழைப்பெண்கள் பிரசவத்தின்போது உயிரிழப்பது அதிகமாக உள்ளது என்னும் ஒரு சோகத்தை ஏற்படுத்தும் விடயமும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரு பக்கம் தாதியர் பற்றாக்குறை, இன்னொரு பக்கம் வேலை கிடைக்காத தாதியர், பணியிட இனவெறுப்பு, கருப்பினப் பெண்கள் மற்றும் ஏழைப்பெண்கள் பிரசவத்தின்போது உயிரிழத்தல் என, அரசு தாய் சேய் நல அமைப்பு தோல்வியடைந்துள்ளது என்பது, இந்த விசாரணையில் தெளிவாகத் தெரியவந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |