அணித்தலைவரான முதல்நாளே விதியை மீறிய சுப்மன் கில் - அபராதம் விதிக்கும் ஐசிசி?
இந்திய அணித்தலைவர் சுப்மன் கில்லுக்கு ஐசிசி அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்ஸில், 471 ஓட்டங்கள் குவித்து, இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.
மழை குறுக்கிட்டதால், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்திய அணி சார்பில், தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், அணித்தலைவர் சுப்மன் கில், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஆகிய மூவரும் சதமடித்து அசத்தியுள்ளனர்.
தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் சாய் சுதர்சன் மற்றும் 8 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் ஆடும் கருண் நாயர், டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்துள்ளனர்.
இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் டங் தலா 4 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினர்.
சுப்மன் கில்லுக்கு அபராதம்?
இந்நிலையில், சுப்மன் கில் அணித்தலைவராக பொறுப்பேற்றுள்ள முதல் போட்டியிலே விதிமுறைகளை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அதாவது முதல் நாள் போட்டியில், சுப்மன் கில் தனது காலில் கருப்பு நிற சாக்ஸ் அணிந்து விளையாடியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் இவ்வாறு கருப்பு நிற சாக்ஸ் அணிந்து விளையாடுவது ஐசிசியின் ஆடைக்கட்டுப்பாட்டு விதியை மீறும் செயலாகும்.
ஐசிசி விதிகளின்படி வெள்ளை அல்லது கிரீம் அல்லது லேசான சாம்பல் நிறம் ஆகிய வண்ணங்களில் மட்டுமே சாக்ஸ் அணிய அனுமதிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறிய செயல் என்பதால், போட்டிக் கட்டணத்தில் இருந்து 10 முதல் 20 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |