நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை பறிமுதல் செய்ய உத்தரவு
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடனை திருப்பி தராததால் வழக்கு
ஈஷன் புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களாக நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி உள்ளனர்.
இந்த நிறுவனத்தின் சார்பில் 'ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரிக்க தனபாக்கியம் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் கடன் பெற அணுகியுள்ளனர்.
அந்நிறுவனம் 3,74,75,000 ரூபாய் கடன்தொகையை ஆண்டுக்கு 30 சதவீதம் வட்டியுடன் திருப்பி தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் வழங்கியிருக்கிறது.
ஆனால், நிபந்தனையின்படி ஈஷன் புரொடக்ஷ்ன்ஸ் கடனை திருப்பி தராததால் வழக்கு தொடரப்பட்டது.
அதன்படி, கடன்தொகையை வட்டியுடன் சேர்த்து 9,02,40,000 ரூபாயை வசூலிக்க ஏதுவாக, 'ஜகஜால கில்லாடி' படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குநரிடம் ஒப்படைக்கும்படி, கடந்த 2024ஆம் ஆண்டு மே 4ஆம் திகதி நீதிபதி உத்தரவிட்டார்.
படம் முழுமையடையவில்லை
அந்த உத்தரவில், படத்தின் உரிமைகளைப் பெற்று அவற்றை விற்று கடன்தொகையை ஈடுசெய்யவும், மீதத்தொகையை ஈஷன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், படம் முழுமையடையவில்லை எனக்கூறி பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம் சிவாஜி கணேசனின் வீட்டை பறிமுதல் (ஜப்தி) செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
மேலும் அந்த மனுவில், தற்போது வரை கடன்தொகையை வட்டியுடன் சேர்த்து 9,39,05,543 ரூபாயை வசூலிக்க வேண்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இதுவரை பதில் மனுதாக்கல் செய்யப்படவில்லை எனக்கூறி, நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் இந்த உத்தரவு குறித்து சம்பந்தப்பட்ட சார் பதிவாளருக்கு தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளை மறுநாளுக்கு தள்ளி வைத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |