பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா பெண் பக்தை வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் அதிரடி கைது!
பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள புத்துப்பாக்கம் பகுதியில் உள்ள சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் வழக்கில் சிக்கி உள்ளார்.
இவர் மீது 3 மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவசங்கர் பாபா மீதான வழக்கை செங்கல்பட்டு சி.பி.சி.ஐ.டி. பொலிசார் விசாரித்து வருகிறார்கள். சிவசங்கர் பாபா, உடல்நலக்குறைவு காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தார்.
அவரிடம் நேரடியாக விசாரணை நடத்தி பின்னர் கைது செய்து அழைத்துவர, துணை பொலிஸ் சூப்பிரண்டு குணவர்மன், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு விமானத்தில் டேராடூன் விரைந்தனர்.
இதற்கிடையில், அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் தடுக்க விமானநிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபா மாயமாகி விட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து சிபிசிஐடி பொலிசார் சிவசங்கர் பாபாவை தேடி வந்தனர். இந்நிலையில் சுசில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபாவை தெற்கு டெல்லியில் உள்ள சித்தரஞ்சன் பார்க் பகுதியில் சிபிசிஐடி பொலிசார் கைது செய்தனர்.
டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசிச்சை பெற்றுவந்த சிவசங்கர் பாபா பெண் பக்தையின் வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் அவரை சிபிசிஐடி பொலிசார் கைது செய்துள்ளனர்.
பெண் பக்தரின் செல்போன் மூலம் பாபா அடிக்கடி பேசிய நிலையில் அந்த சிக்னல் மூலம் அவர் பொலிசில் சிக்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.