பாலியல் புகாரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு!
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சாத்தாங்குப்பம் பகுதியில் சுஷில் ஹரி இன்டர் நேஷனல் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் கூறினர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. பொலிசார், டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பின்னர் அவரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். அதனைத்தொடர்ந்து நேற்று மதியம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
அதன்பின்னர் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாட்கள் அதாவது ஜூலை 1-ந் திகதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.