இந்த பிரச்சினை உடைய குழந்தைகளை கொரோனா தாக்கினால் ஆறு மடங்கு அதிக அபாயம்
ஆஸ்துமா பிரச்சினை உடைய குழந்தைகளை கொரோனா தாக்கினால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயம் ஆறு மடங்கு அதிகம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
ஸ்காட்லாந்தில், 750,000 மாணவமாணவியரிடையே நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், முழுமையாக ஆஸ்துமாவுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளாத மாணவமாணவிகளில் 100,000 பேரில் 548 பேர் கொரோனா காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஆஸ்துமா பிரச்சினை இல்லாதவர்களில் 100,000 பேரில் 55 பேர் மட்டுமே கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
கொரோனா அபாயத்தை அதிகரிக்கக்கூடிய பிற காரணிகளை கணக்கில் எடுத்துக்கொண்டபிறகும், ஆஸ்துமா பிரச்சினை உடைய பிள்ளைகள் கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயம் ஆறு மடங்கு அதிகம் என்ற முடிவுக்கு அறிவியலாளர்கள் வந்துள்ளார்கள்.
ஆகவே, எடின்பர்க் பல்கலைக்கழகத்திலுள்ள அந்த ஆய்வை மேற்கொண்ட அந்த அறிவியலாளர்கள், பரிந்துரை ஒன்றை முன்வைத்துள்ளார்கள்.
அதாவது, மோசமான ஆஸ்துமா பிரச்சினை உடைய 100,000 பிள்ளைகளுக்கு, அதாவது ஐந்து வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களாக இருக்கும் பட்சத்திலும், அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படவேண்டும் என அவர்கள் பரிந்துரைத்துள்ளார்கள்.
தற்போது, 12 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், 100,000 பேருக்கு கணக்கிடும்போது 548 பேருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அந்த ஆய்வு கூறினாலும், 100 பேருக்கு என கணக்கிடும்போது அந்த எண்ணிக்கை அதிகமில்லை என்பதையும் கருத்தில் கொள்வது நல்லது.
அதாவது, 380 பேரில் ஒருவர், அதுவும் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 380 பேரில் ஒருவருக்குத்தான் இந்த அபாயம் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது என்பதால், மொத்தத்தில் கூறப்போனால் மோசமான ஆஸ்துமா பிரச்சினை உடைய பிள்ளைகளுக்கும் கொரோனாவால் ஆபத்து குறைவு என்றே எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதால், இந்த ஆய்வு முடிவால் ஆஸ்துமா பாதிப்புடையவர்களோ அவர்களது பெற்றோரோ திகிலடைய வேண்டியதில்லை.