புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவதற்குமுன் பிரித்தானியாவுக்குள் நுழைந்துவிடவேண்டும்... புலம்பெயர்ந்தோரை அவசரப்படுத்தும் கடத்தல்காரர்கள்
பிரித்தானியாவுக்கு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவதற்குள் பிரித்தானியாவுக்குள் நுழைந்துவிடவேண்டும் என கடத்தல்காரர்கள் சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை அவசரப்படுத்திவருகிறார்கள்.
குறிப்பாக அல்பேனியா நாட்டிலிருந்து பிரித்தானியாவுக்கு வர விரும்பும் புலம்பெயர்ந்தோரை, முடிந்தவரை சீக்கிரமாக பிரித்தானியாவுக்குள் நுழைய அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டுவிட்டால், ஆங்கிலக் கால்வாயில் அதிக அளவில் கடலோரக் காவல் படையினர் ரோந்து வரத்துவங்கி விடுவார்கள் என்றும், கடற்கரையில் வேலி அமைக்கப்படும் என்றும், அதனால், பணம் கொடுத்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயல்வோர் தங்கள் பணத்தை இழக்க நேரிடும் என்றும் கடத்தல்காரர்கள் அல்பேனியர்களை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், இப்போது பிரித்தானியாவுக்குள் நுழைய முயல்வோருக்கு கட்டண சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளதாம். முன்பு பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்ட விரோத புலம்பெயர்ந்தோரிடம் ஆளுக்கு 10,000 பவுண்டுகள் வசூலித்துவந்த கடத்தல்காரர்கள், இப்போது 2,000 பவுண்டுகள் கொடுத்தால் போதும் என்று கூறியுள்ளார்களாம்.
Credit: Reuters
இந்த சலுகை, படகில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயல்பவர்களுக்குத்தான். லொறிகளில் பிரித்தானியாவுக்குள் நுழைய முயல்வோருக்கோ ஆளுக்கு 22,000 பவுண்டுகள் வசூலிக்கப்படுகிறதாம்.ஏனென்றால், லொறிகளில் பயணிக்கும்போது அதிகாரிகளிடம் சிக்கிக்கொள்ளும் அபாயம் அதிகம் என்பதால், லொறிகளில் பயணிக்க அதிக தொகையாம்.
ஆக, எப்படியும் உடனடியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலுங்கள், புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால் பிரித்தானியாவுக்குச் செல்லும் ஆசையில் மண் விழுந்துவிடும் என, கூவி அழைக்காத குறையாக கடத்தல்காரர்கள் சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவுக்குள் செல்வதற்காக அழைத்துவருகிறார்களாம்.
Credit: Reuters
Credit: AFP