பாம்பு பிடிப்பவரின் காலைக் கவ்விப் பிடித்த ராஜநாகம்: ஒரு திகில் சம்பவம்
இந்தியாவில், பாம்பு பிடிப்பதில் புகழ் பெற்றவரான ஒருவரை, ராஜநாகம் ஒன்று தீண்டும் திகில் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் வவா சுரேஷ் (Vava Suresh, 48). பாம்புகளை இலாவகமாக பிடிப்பதில் புகழ் பெற்ற சுரேஷ், ஆயிரக்கணக்கான பாம்புகளைப் பிடித்துள்ளார், நூற்றுக்கணக்கான முறை பாம்புகளிடம் கடியும் பட்டுள்ளார்.
இந்நிலையில், திங்கட்கிழமை ராஜநாகம் ஒன்றைப் பிடிப்பதற்காக சுரேஷை அழைத்திருக்கிறார்கள். சுரேஷ் அப்போதுதான் பாம்புக் கடிக்காக சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பியிருக்கிறார்.
திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் பாம்பு இருந்த இடத்துக்கு வந்த சுரேஷ், அதைப் பிடித்து சாக்குப் பைக்குள் அடைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அந்த ராஜநாகம் சாக்குப்பைக்குள் போகாமல் வெகு நேரமாக போக்குக் காட்டியிருக்கிறது. ஒரு 4.45 மணி இருக்கும்போது, எதிர்பாராதவிதமாக சட்டென சுரேஷின் தொடையைக் கவ்விப் பிடித்திருக்கிறது அந்த ராஜநாகம்.
கஷ்டப்பட்டு அதனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட சுரேஷ், அப்படியும் அந்தப் பாம்பை சாக்கில் அடைத்துவிட்டுத்தான் ஓய்ந்திருக்கிறார்.
அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்ட சுரேஷுக்கு மாரடைப்பு ஏற்படவே, சிறப்பு சிகிச்சைக்காக அவரை வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் முழுமையாக குணமடைவாரா என்று இப்போதைக்குக் கூறமுடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.
தொடர்ந்து சுரேஷுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவந்தாலும், அவர் இன்னமும் சுயநினைவின்றி தீவிர சிகிச்சைப்பிரிவில்தான் உள்ளார்.