புதிதாக வாங்கிய சோபாவில் மறைந்திருந்த பாம்பு! பின்னர் நடந்தது என்ன?
அமெரிக்காவில் ஒருவர் புதுசாக வாங்கிய சோபாவில் 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று மறைந்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Florida மாகாணத்தில் உள்ள Clearwater நகரில் ஒருவர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் பக்கத்தில் உள்ள கடையில் புதுசாக சோபா ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது அவர் வீட்டிற்கு வந்த பிறகு சோபாவில் அமர்ந்த போது அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
ஓய்வெடுக்க இதமாக அவர் வாங்கிய சோபாவில் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு இருந்துள்ளது. இதையடுத்து பதறிப்போன அவர் உடனே காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு உடனடியாக படையெடுத்த காவல் அதிகாரிகள் சோபா உள்ளே சோதனை செய்தனர்.
அப்போது சோபாவில் மறைந்திருந்த சிவப்பு வால் கொண்ட Boa என்ற இனத்தை சேர்ந்த பாம்பை பத்திரமாக மீட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அவர்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர்.
அதில், சோபாவில் ஒளிந்து கொண்டிருந்த பாம்பு 5 அடி நீளம் கொண்டது. அதனை பாதுகாப்பாக அகற்றிய பின்னர் உள்ளூரில் உள்ள செல்லப்பிராணிகளை வளர்க்கும் கடை ஒன்றில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
அதுமட்டும் இல்லாமல் அவர்கள் பாம்பை கையில் வைத்திருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். இது தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.