பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து பயணிப்போருக்கு சில விதிகளை நெகிழ்த்தியுள்ள ஜேர்மனி
பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஜேர்மனிக்கு பயணிப்போர் இனி தங்களை இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியதில்லை.
Omicron வகை கொரோனா பரவல் அதிகம் உள்ள சில குறிப்பிட்ட நாடுகளிலிருந்து ஜேர்மனிக்கு வரும் பயணிகளுக்கு, இன்று செவ்வாய்க்கிழமை முதல், ஜேர்மனி தனது பயணக்கட்டுப்பாடுகள் சிலவற்றை நெகிழ்த்தியுள்ளது.
பிரித்தானியா, தென்னாப்பிரிக்கா முதலான ஒன்பது நாடுகள், 2021 இறுதி வாக்கில், Omicron வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அபாயமான நாடுகள் என்ற பட்டியிலின் கீழ் கொண்டுவரப்பட்டன.
இந்த Omicron வகை கொரோனா வைரஸ், முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மிக வேகமாக உலகமெங்கும் பரவியது.
இந்த Omicron வகை கொரோனா வைரஸஸால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று.
Omicron வகை கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து அபாய நாடுகளிலிருந்து ஜேர்மனிக்குள் நுழைவோர், தங்களை 14 நாட்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும், கொரோனா தடுப்பூசி பெற்றிருந்தாலும் சரி, கொரோனாவிலிருந்து விடுபட்டிருந்தாலும் சரி, எக்காரணம் கொண்டும் இந்த தனிமைப்படுத்தல் நாட்கள் குறைக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அபாய நாடுகளிலிருந்து வரும் ஜேர்மன் குடிமக்களுக்கும், ஜேர்மனியில் நிரந்தர வாழிடம் கொண்டவர்களுக்கும் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், தற்போது பயண விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அவை என்னென்ன மாற்றங்கள்?
- கடந்த வியாழக்கிழமையே Robert Koch நிறுவனம், செவ்வாய் முதல், அதாவது இன்று (4.1.2022) முதல், Omicron வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அபாயமான நாடுகள் என்ற பட்டியிலின் கீழ் இனி எந்த நாடுகளும் சேர்க்கப்படப்போவதில்லை என அறிவித்திருந்தது.
- இந்நிலையில், தற்போது, இந்த விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அபாய நாடுகளிலிருந்து ஜேர்மனிக்கு வரும் பயணிகளில், கொரோனா தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தை வைத்திருப்போர் இனி தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியதில்லை.
- தடுப்பூசி பெறாதவர்கள், தங்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும். அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து அவர்களுக்கு கொரோனா இல்லை என தெரியவந்தால், தனிமைப்படுத்தல் 5 நாட்களாக குறைக்கப்படும்.