பொருளாதார நெருக்கடியில் திணறும் இலங்கை! 1.9 பில்லியன் டொலர்கள் கடன் தரும் இந்தியா
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசுக்கு இந்திய அரசு 1.9 பில்லியன் டொலர்கள் கடன் உதவியாக வழங்கவுள்ளது.
இலங்கைக்கு முக்கிய வருவாய் ஆக இருப்பது சுற்றுலாப் பயணிகள் மூலம் கிடைக்கும் வருவாய்தான். இதுவே அந்நாட்டிற்கு அதிகளவு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும்.
ஆனால் கொரோனா பரவலுக்குப் பிறகு, இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வராததால், அந்நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது. அத்துடன், இலங்கை அரசின் புதிய விவசாயக் கொள்கையால், அந்நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டிருப்பதோடு, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளன.
அத்துடன் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலையும் வரலாறு காணாத வகையில், ஒன்றரை லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சமையல் எரிவாயு விலையும் கிடுகிடுவென உயர்ந்ததோடு, கடும் தட்டுப்பாடும் நிலவுகிறது.
இதனால், இலங்கை மக்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில், பல மணி நேர மின்வெட்டும் நீடிக்கிறது. இதையடுத்து, தலைநகர் கொழும்பில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி முழக்கமிட்ட அவர்கள், நாட்டின் பொருளாதாரத்தை ராஜபக்சே குடும்பத்தினர் அழித்துவிட்டதாக குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், அரிசி, கோதுமை மாவு, மருந்து ஆகிய அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக, இலங்கை - இந்தியா இடையே 1.9 பில்லியன் டொலர்கள் கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய தலைநகர் டெல்லியில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், இலங்கை நிதியமைச்சர் பசல் ராஜபக்சே ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இலங்கை பண மதிப்பின்படி ரூ 26 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு கடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.