உலகக்கோப்பை Super 12-க்கு தகுதி பெற்ற இலங்கை! அசத்திய வஹிண்டு ஹசரங்கா: அபார வெற்றி
உலகக்கோப்பை டி20 தொடருக்கான குவாலிபயர் போட்டியில், அயர்லாந்தை இலங்கை வீழ்த்தியதன் மூலம் சூப்பர் 12-க்கு தகுதி பெற்றுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 23-ஆம் திகதி முதல் உலகக்கோப்பை டி20 தொடருக்கான சூப்பர் 12- போட்டிகள் துவங்கவுள்ளது.
இதற்கு இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவு, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் ஏற்கனவே சூப்பர் 12- க்கு தகுதி பெற்றுவிட்டதால், இதில் தகுதி பெறுவதற்கான குவாலிபயர் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்த குவாலிபயரின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி, அயர்லாந்தை எதிர் கொண்டது. அதன் படி முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக துவக்க வீரர் பதும் நிஷன்கா 61 ஓட்டங்களும், வஹின்டு ஹசரங்கா 71 ஓட்டங்களும் எடுத்தனர். அதன் பின் 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி, இலங்கை அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் இலங்கை அணி 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 12-க்கு தகுதி பெற்றுள்ளது.
இதற்கு முன் நடந்த நமீபியா அணிக்கெதிரான ஆட்டத்தில் இலங்கை வென்றிருந்த நிலையில், தற்போது புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இலங்கையின் இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணி தொடரில் இருந்து வெளியேறுகிறது.
வரும் வெள்ளிக்கிழமை அயர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கான போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்தணி தகுதி பெறும்.
இலங்கை அணி குழு A-வில் உள்ளது. இந்த குழுவில் இலங்கை, நெதர்லாந்து, அயர்லாந்து, நமீபியா போன்ற அணிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.