பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட 3000 டன் கழிவுகள்: இலங்கையின் அதிரடி நடவடிக்கை!
கடந்த 2017 முதல் 2019ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 3000 டன் கழிவுகளின் இறுதி தொகுப்பையும் பிரித்தானியாவிற்கு திங்கள்கிழமை இலங்கை சுங்கத்துறை திருப்பி அனுப்பியுள்ளது.
பிரித்தானியாவில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட, பயன்படுத்தப்பட்ட மெத்தைகள் மற்றும் தரைவிரிப்புகள் போன்ற கழிவுகள் சுமார் 263 கொள்கலன்களில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தக்கழிவுகளை உள்ளூர் நிறுவனங்கள் இறக்குமதி செய்து பயன்படுத்தப்பட்ட மெத்தைகள் போன்ற பொருள்களில் உள்ள பஞ்சு முதலிய மூல பொருள்களை பிரித்தெடுத்து அவற்றை மீண்டும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு இருந்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கையில் உள்ள உள்ளூர் சுற்றுசூழல் ஆர்வலர்கள் குழு இதனை கண்டறிந்து, இந்த கழிவுகளை ஏற்றுமதி செய்த நிறுவனங்களே திரும்பப்பெற வலியுறுத்தும் மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அதனை தொடர்ந்து இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் வேண்டுகோளை கடந்த 2020ஆம் ஆண்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இதன் அடிப்படையில் 2020ஆம் ஆண்டு செப்டெம்பரில் மருத்துவக்கழிவுகள் அடங்கிருந்த 21 கொள்கலனை முதலில் இலங்கை சுங்கத்துறை பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்பியது.
அதன் தொடர்ச்சியாக 3000 டன் தொன் கழிவுகளை வைத்து இருந்த 263 கொள்கலன்களில் இறுதி தொகுப்பான 45 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் இருந்து திங்கள்கிழமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் முக்கியமானது என்னவென்றால், சுங்கத்துறை அதிகாரிகளின் சுற்றுப்படி, இந்தக்கழிவுகளில் பயன்படுத்தப்பட்ட மெத்தைகள் மற்றும் தரைவிரிப்புகள் என இவைமட்டும் இல்லாமல் இவற்றுடன் மனித உடல் பாகங்கள் மருத்துவமனைகளில் உள்ள உயிரி கழிவுகள் போன்றவையும் இருந்ததாக தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.