பாகிஸ்தானில் இலங்கையர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி! லங்கா ப்ரீமியர் லீக் தொடர்பில் முக்கிய தகவல்
லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வரும் பாகிஸ்தான் வீரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலையில் மேலாளராக Priyantha Diyawadana என்ற இலங்கையர் பணிபுரிந்து வந்தார். இவரது அலுவலக சுவர் அருகே தெஹ்ரீக் - இ - லபைக் என்ற அமைப்பின் மதப் பிரசார போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
அதை Priyantha கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டுள்ளார். இதைப் பார்த்த தொழிற்சாலை ஊழியர்கள் அந்த அமைப்பினரிடம் தெரிவித்துள்ளனர். உடனே அந்த அமைப்பைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் தொழிற்சாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அத்துடன் அலுவலகத்தில் இருந்த Priyanthaவை வெளியே இழுத்து வந்து கண்மூடித்தனமாக தாக்கியதுடன் உயிரோடு தீ வைத்து எரித்தனர், தீயின் வேதனை தாங்காமல் அலறித் துடித்த பிரியந்தா சில நிமிடங்களில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் இலங்கை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இலங்கையில் லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஞாயிறு அன்று தொடங்கி டிசம்பர் 23ஆம் திகதி வரை நடக்கவுள்ளது.
இதில் ஷோயிப் மாலிக், முகமது ஹபீஸ் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்களும் வேறு வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வீரர்களுக்கு மட்டுமின்றி, அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம் என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி கூறினார்.